/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'அறிவியல் பூர்வ ஆய்வே சமூக மாற்றத்துக்கான வழி'
/
'அறிவியல் பூர்வ ஆய்வே சமூக மாற்றத்துக்கான வழி'
ADDED : செப் 02, 2025 11:09 PM
திருப்பூர்; திருப்பூர் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை வானவில் மன்றம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் காங்கயம் கல்வி நிறுவனங்கள் இணைந்து, மாணவ, மாணவியருக்கான கணித திருவிழாவை, காங்கயம் கல்வி நிலையத்தில் நடத்தின.
தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் கவுரிசங்கர் பேசுகையில், ''இன்று உயர்கல்வியில், அடிப்படை அறிவியல் மற்றும் கணித பாட பிரிவுகளை தேர்ந்தெடுப்பது குறைந்து வருகிறது என, உயர்கல்வி நிறுவனங்கள் சுட்டிக் காட்டுகின்றன.
அறிவியல் கணிதம் என்பது, வெறும் பாடம் மட்டுமல்ல. நம் அன்றாட வாழ்வின் அங்கம் என்பதை உணர வேண்டும். அறிவியல் பூர்வமான ஆய்வுகளே இன்றைக்கான தேவை'' என்றார்.
சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற, சவீதா பல்கலை பேராசிரியர் அசோக்குமார் பேசுகையில், ''பள்ளி பருவத்திலேயே அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்ள இதுபோன்ற அறிவுத்திருவிழா மேடைகளை மாணவ, மாணவியர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,'' என்றார்.
இந்த கணித திருவிழாவில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்; 530 ஆய்வுக் கட்டுரைகள் சமர்பித்தனர். கண்காட்சியில் பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவியருக்கும் பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.
ஜூனியர், சீனியர் மற்றும் சூப்பர் சீனியர் பிரிவுகளில் முதல் மூன்றிடம் பெற்றவர்களுக்கு, முறையே, 5 ஆயிரம், 3 ஆயிரம் மற்றும் 2 ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை, கல்வி நிறுவனங்கள் சார்பில் வழங்கப்பட்டது.