/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தரமான விதைகளை பெற விதை பண்ணை அதிகாரிகள் ஆய்வு
/
தரமான விதைகளை பெற விதை பண்ணை அதிகாரிகள் ஆய்வு
ADDED : ஜன 07, 2025 02:09 AM

உடுமலை, ; குடிமங்கலம் வட்டாரத்திலுள்ள விதை பண்ணைகளில், விதை சான்றளிப்புத்துறை மற்றும் வேளாண்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
தமிழக விதை மேம்பாட்டு முகமை வாயிலாக, குடிமங்கலம் வட்டார விவசாயிகளுக்கு தேவையான விதைகளை விவசாயிகளே உற்பத்தி செய்யும் வகையில், விதைப்பண்ணை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
அவ்வகையில், சோளம், மக்காச்சோளம், கம்பு போன்ற தானிய வகைகளுக்கு, 12 ெஹக்டேர் விதை பண்ணை பதிவு செய்யப்பட்டு, 12 டன் விதைகள் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
உளுந்து, பாசிப்பயறு, தட்டை, கொண்டைக்கடலை முதலான பயறு வகை பயிர்களுக்கு, 32 ெஹக்டேரில், 22 டன் விதை கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து, குடிமங்கலம் வட்டார வேளாண்துறை உதவி இயக்குனர் வசந்தா கூறியிருப்பதாவது:
விவசாயத்தில் முதல் முதலீடு நல்விதையாகும். அந்த நல்விதைகளை விவசாயிகளுக்கு வினியோகம் செய்யும் நோக்கத்தில், நல்ல தரமான வல்லுநர், ஆதார நிலை, சான்று நிலை விதைகள் விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கப்படுகிறது.
அவ்விதைகள் விதைக்கப்படும் விளைநிலத்தை, விதை பண்ணையாக விதைச்சான்று துறையில் பதிவு செய்யப்படுகிறது. பதிவு செய்யப்பட்ட விதை பண்ணையானது, விதை சான்று துறை மற்றும் வேளாண்துறை அதிகாரிகளால், விதை நடவு முதல் அறுவடை வரை தொடர் கண்காணிப்பு செய்யப்படுகிறது.
விதைப்பண்ணைகளில், அறுவடை செய்யப்படும் பயறு, தானியங்கள் சுத்திகரிக்கப்பட்டு, சான்று அட்டை பொருத்தி, விதை வினியோகத்துக்காக வேளாண் விற்பனை கிடங்கில் இருப்பு வைக்கப்படுகிறது.
நடப்பு ராபி பருவ விதைப்பண்ணைகளை, விதை சான்று அலுவலர் சர்மிளாபானு, விதை உதவி அலுவலர் சசிக்குமார் மற்றும் வேளாண்துறை சார்பில் ஆய்வு செய்து, பயிர் விலகு துாரம், கலவன்களை அகற்றுதல் குறித்து விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.