/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அதிர்ச்சியூட்டும் தாக்குதல் சம்பவங்கள் :அரசு மருத்துவமனையில் தடுப்பது அவசியம்
/
அதிர்ச்சியூட்டும் தாக்குதல் சம்பவங்கள் :அரசு மருத்துவமனையில் தடுப்பது அவசியம்
அதிர்ச்சியூட்டும் தாக்குதல் சம்பவங்கள் :அரசு மருத்துவமனையில் தடுப்பது அவசியம்
அதிர்ச்சியூட்டும் தாக்குதல் சம்பவங்கள் :அரசு மருத்துவமனையில் தடுப்பது அவசியம்
ADDED : அக் 22, 2025 11:14 PM

திருப்பூர்:திருப்பூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், போலீஸ் கண்காணிப்பைத் தீவிரப்படுத்துவதன் மூலம், தொடர்ந்து டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவப்பணியாளர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் நடப்பதையும், நோயாளிகளின் உறவினர்களின் வார்த்தை மோதல்களையும் தவிர்க்க முடியும்.
திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் 20ம் தேதி இரவு பயிற்சி டாக்டர் கார்த்திக் பணியில் இருந்தார். அப்போது, கோவில் வழியை சேர்ந்த தீபக், கார்த்திக் ஆகியோர் சாலை விபத்தில் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவருக்கு முதலுதவி வழங்கிய டாக்டர்கள், 'எக்ஸ்ரே' பரிசோதனை செய்ய காத்திருந்தனர். காலதாமதம் செய்வதாக கூறி, காயமடைந்தவர்களின் நண்பர்களான, மூன்று பேர் பயிற்சி டாக்டரிடம் தகராறில் ஈடுபட்டு தாக்கினர். திருப்பூர் தெற்கு போலீசார் தேவேந்திரன், தேவக்குமார், பாரதிராஜா ஆகியோரை கைது செய்தனர். மூன்று பேரில், தேவேந்திரன் தந்தை போலீஸ் ஏட்டாக பணிபுரிகிறார்.
அன்று நடந்த மற்றொரு சம்பவம்
நள்ளிரவு டாக்டரை தாக்கிய சம்பவம் நடந்த அன்று, மற்றொரு தகராறும் நடந்துள்ளது. உடல் நலம் சரியில்லாமல் அனுமதிக்கப்பட்ட நபருடன் இருந்த நபர் வெளியே வரும் போது, மருத்துவமனையில் உள்ள தனியார் துாய்மை பணியாளர் சுத்தம் செய்து கொண்டிருந்தார். அந்த பெண்ணிடம், தரையை துடைக்க இவ்வளவு நேரம் ஆகிறதா என்று அந்த நபர் வாக்குவாதம் செய்தார். வார்டு விசிட்டுக்கு சென்ற டாக்டரிடம், துாய்மை பணியாளர், இதுகுறித்து தெரிவித்தார். இதுகுறித்து அந்த நபரிடம் டாக்டர் தட்டிக்கேட்கவே, வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டது. தகராறு செய்த நபர் மன்னிப்பு கேட்கவே, டாக்டர் தரப்பில் புகார் கொடுக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.
பிரசவ வார்டில்நடந்த மோதல்
கடந்த மாதம், திருப்பூர் வி.மேட்டுப்பாளையத்தை சேர்ந்த கர்ப்பிணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இளம்பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்து இறந்தது. ஆத்திரமடைந்த அப்பெண்ணின் உறவினர்கள், டாக்டர்கள் உரிய சிகிச்சை அளிக்காததால் குழந்தை இறந்ததாக கூறி, டாக்டர், பணியாளர்களுடன் வாக்குவாதம் செய்து, பிரசவ வார்டு கண்ணாடியை உடைத்தனர். அரசு செவிலியர்கள் உள்ளிட்டோர் உள்ளிருப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர். பின், அப்பெண்ணின் கணவர், மாமனார், மைத்துனர் என, மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
அன்றாடம் அரங்கேற்றம்
போதையில் ஏற்படும் விபத்துகளில், உடன் வரக்கூடிய நபர்கள் பணியாளர்களிடம் வாக்குவாதம் செய்வது போன்றவை அன்றாடம் அரங்கேறி வருகிறது. வளாகத்தில், தேவையில்லாத போதை ஆசாமிகள் வலம் வருவது போன்றவை இருக்கிறது. வளாகத்தில் தேவையில்லாமல் சுற்றி வரும் நபர்கள், இரவு நேரத்தில் போதையில் வரக்கூடிய நபர்களை உள்ளே போலீசார் அனுமதிக்கக்கூடாது. அவர்களை உரிய பரிசோதனைக்கு பின் அனுமதிக்க வேண்டும்.
கூடுதல் கண்காணிப்பு தொடர வேண்டும்
கூடுதல் போலீசாரை நியமித்து, சுழற்சி முறையில் அனைத்து பகுதியில் கண்காணிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
தாக்குதல் சம்பவம் காரணமாக போலீஸ் கமிஷனர் உத்தரவின் பேரில், தற்போது போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். இதை பெயருக்கு ஓரிரண்டு நாட்கள் செய்யாமல், தொடர வேண்டும் என்பது மருத்துவ பணியாளர்களின் எதிர்பார்ப்பு.