/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விசைத்தறியாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து கடையடைப்பு போராட்டம்! விரைவாக சுமூக தீர்வு காண வலியுறுத்தல்
/
விசைத்தறியாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து கடையடைப்பு போராட்டம்! விரைவாக சுமூக தீர்வு காண வலியுறுத்தல்
விசைத்தறியாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து கடையடைப்பு போராட்டம்! விரைவாக சுமூக தீர்வு காண வலியுறுத்தல்
விசைத்தறியாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து கடையடைப்பு போராட்டம்! விரைவாக சுமூக தீர்வு காண வலியுறுத்தல்
ADDED : ஏப் 16, 2025 03:11 AM

கூலி உயர்வை வலியுறுத்தி, விசைத்தறியாளர்கள் நடத்திய கடை அடைப்பு போராட்டத்துக்கு, சாமளாபுரம், காரணம்பேட்டை, தெக்கலுாரில் முழு ஆதரவு அளிக்கப்பட்டது. இப்பிரச்னைக்கு விரைவாக தீர்வு காண வலியுறுத்தப்பட்டது.
கோவை, திருப்பூர் மாவட்ட விசைத்தறி சங்க உரிமையாளர்கள், கூலி உயர்வை வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பான பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாத நிலையில், கடந்த மார்ச், 19ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதன்படி, சோமனுார், அவிநாசி, தெக்கலூர், புதுப்பாளையம், பெருமாநல்லூர் ஆகிய சங்கங்களுக்கு உட்பட்ட, 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட விசைத்தறிகளை நிறுத்தி, விசைத்தறியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதிலும் தீர்வு கிடைக்காத நிலையில், 11 முதல் 15ம் தேதி வரை, உண்ணாவிரத போராட்டம் அறிவித்து, கருமத்தம்பட்டியில் உண்ணாவிரதம் நடந்து வருகிறது. இதற்கிடையே, கூலி உயர்வை வலியுறுத்தி, கருமத்தம்பட்டி நகராட்சி மற்றும் அவிநாசி, சாமளாபுரம், கண்ணம்பாளையம் பேரூராட்சிகள் உட்பட, தெக்கலுார், பெருமாநல்லுார், புதுப்பாளையம் ஊராட்சி பகுதிகளில் நேற்று கடையடைப்பு போராட்டம் நடந்தது. விசைத்தறிகள் அதிகம் உள்ள சாமளாபுரம், காரணம்பேட்டை பகுதிகளில் முழுமையான கடையடைப்பு நடந்தது.
இது குறித்து, சோமனுார் விசைத்தறி சங்கத் தலைவர் பூபதி கூறுகையில், ''கூலி உயர்வை வலியுறுத்தி, பல்வேறு கட்ட போராட்டங்களுக்குப் பின், நேற்று, கடையடைப்பு போராட்டமும் நடத்தப்பட்டது. இதற்கு, அனைத்து வியாபாரிகள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்டோர், முழுமையான ஆதரவு அளித்தனர். இதற்கிடையே, நேற்று கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த அமைதி பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுப்பதாக கூறப்பட்டது. இதனால், விசைத்தறி சங்க நிர்வாகிகளுடன் ஆலோசித்து, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அறிவிப்போம்,'' என்றார்.
அவிநாசி வட்டாரத்தில்...
உண்ணாவிரத போராட்டத்தின் கடைசி நாளான நேற்று விசைத்தறி உரிமையாளர்களுக்கு ஆதரவாக, தெக்கலுாரிலும், கருமத்தம்பட்டி, சாமளாபுரம், காரணம்பேட்டை மற்றும் அன்னுார் ஆகிய பகுதிகளில் ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. தெக்கலுார், கருவலுாரில், கடைகள் நேற்று அடைக்கப்பட்டு கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோரிக்கை தொடர்ந்து கோரிக்கைகள் நிறைவேறும் வரை காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தொடரும் எனவும், அடுத்த கட்ட போராட்டம் குறித்து சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து விரைவில், அறிவிக்கப்படும் என கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர் கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.
- நமது நிருபர் குழு -