ADDED : ஏப் 07, 2026 11:22 PM

திருப்பூர்;நொய்யல் ஆற்றின் கரையோரம் குப்பை கொட்டி தீ வைக்கப்பட்டது. இதில் கிளம்பிய புகை விண்னை முட்டும் வகையில் பரவியதால் அவதி ஏற்பட்டது.
திருப்பூர் நகர பகுதியில் சேகரமாகும் குப்பை கழிவுகள் தனியார் ஒப்பந்த நிறுவனத்தால் அகற்றப்படுகிறது. இதில், சில பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பை கழிவுகள் கேட்பாரற்ற பகுதிகளில் கொட்டிக் கிடக்கிறது. அவ்வப்போது இந்த குப்பை அகற்றப்பட்டாலும், பெரும்பாலான நேரங்களில் இவற்றில் அதே இடத்தில் தீ வைத்து எரிக்கும் செயல்களும் அரங்கேறுகிறது.
அவ்வகையில் நொய்யல் ஆற்றின் கரையில், பார்க்கும் இடமெல்லாம் குப்பை கழிவுகள் கொட்டிக்கிடக்கிறது. நேற்று மதியம், இந்த குப்பையில் தீ வைத்து எரித்துள்ளனர். இதில் கிளம்பிய கரும்புகை அந்தப்பகுதி முழுவதும் காற்றில் பரவி பெரும் அவதி ஏற்பட்டது. அருகேயுள்ள உயர் மின் கோபுரத்தை விட உயரமாக இந்த கரும்புகை எழுந்து காணப்பட்டது. இதனால், அவ்வழியாக வாகனங்கள், கடும் சிரமத்துடன் அப்பகுதியைக் கடந்து செல்லும் நிலை காணப்பட்டது.
