/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சம்பள உயர்வு ஒப்பந்தத்தில் பனியன் தொழிலாளருக்கு சமூகப் பாதுகாப்பு!
/
சம்பள உயர்வு ஒப்பந்தத்தில் பனியன் தொழிலாளருக்கு சமூகப் பாதுகாப்பு!
சம்பள உயர்வு ஒப்பந்தத்தில் பனியன் தொழிலாளருக்கு சமூகப் பாதுகாப்பு!
சம்பள உயர்வு ஒப்பந்தத்தில் பனியன் தொழிலாளருக்கு சமூகப் பாதுகாப்பு!
ADDED : மார் 19, 2026 05:02 AM

திருப்பூர்: பனியன் தொழிலாளர் பாதுகாப்பு நலன்கருதி, அனைத்து தொழிலாளர்களுக்கும் அ டையாள அட்டை வழங்கவும், ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள 'குரூப்' இன்சூரன்ஸ் வழங்கவும், சம்பள உயர்வு ஒப்பந்தத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில் பணியாற்றும், கட்டிங், டெய்லரிங், நிட்டிங், செக்கிங், உதவியாளர் என, அனைத்து வகையான தொழிலாளருக்கும் சம்பள உயர்வு ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்துள்ளது. உற்பத்தியாளர்கள் சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில், திருப்பூர் ஏற்றுமதியளர்கள் சங்கம், இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உற்பத்தியாளர் சங்கங்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் தரப்பினர் கையெழுத்திட்டுள்ளனர்.
புதிய சம்பள உயர்வு ஒப்பந்தப்படி, நடைமுறை சம்பளத்தில் இருந்து, சம்பள உயர்வு அமலாகும். முதல் ஆண்டுக்கு, 18 சதவீதம், அடுத்து வரும் மூன்று ஆண்டுகளுக்கு தலா, 5 சதவீதம் வீதம் சம்பள உயர்வு அமலுக்கு வந்துள்ளது. இதனால், தொழிலாளரின் சம்பளம், ஷிப்டுக்கு, 80 முதல் 90 ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளதாக, நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
பஞ்சப்படி 1936ம் ஆண்டு சென்னை விலைவாசி குறியீட்டு எண் அடிப்படையில் பஞ்சப்படி நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, 20 ஆயிரம் புள்ளிகளுக்கு, மாதம், 2,500 ரூபாயும்; அதற்கு மேல் வரும் ஒவ்வொரு புள்ளிக்கும், தலா, 15.50 பைசாவும் பஞ்சப்படியாக வழங்க, புதிய ஒப்பந்தத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்தொகை, மாதம் ஒருமுறை கணக்கிட்டு வழங்கப்படும்.
பயணப்படி தொழிலாளர்கள் தினமும் நிறுவனங்களுக்கு வந்து செல்ல தினமும், 30 ரூபாய் வீதம் கணக்கீட்டு, பயணப்படியாக வழங்கப்படும். இதுவரை, 25 ரூபாயாக இருந்தது, 30 ரூபாயாக உயர்ந்துள்ளது.
'ஓவர்டைம் பேட்டா' ஒரு 'ஷிப்ட்' என்பது, எட்டு மணி நேர வேலை; அதற்கு மேல் பணியாற்றுவது, 'ஆப்நைட்' என்று கூறப்படுகிறது. அவ்வாறு பணியாற்றும் போது, டீ பேட்டாவாக, 50 ரூபாய் வழங்கப்பட்டது; இனிமேல், 60 ரூபாய் வழங்க ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
குடும்ப நலநிதி தொழிலாளர், ஆறு மாதம் பணியாற்றி இருந்தால், பணிக்காலத்தில் இறந்தால், அவரது குடும்பத்துக்கு, உதவி தொகையாக, 21 ஆயிரத்து, 500 ரூபாய் வழங்கப்படும்.
திருமண உதவி பெண் தொழிலாளருக்கு மட்டும் திருமண உதவி வழங்கப்படும். அதாவது, ஓராண்டுக்கு மேல் பணியாற்றி இருந்தால், 2,000 ரூபாய்; இரண்டு ஆண்டுகள் பணியாற்றியிருந்தால், 3,500 ரூபாய்; மூன்று அல்லது அதற்கு மேல் பணியாற்றும் தொழிலாளருக்கு, திருமண உதவியாக, 5,000 ரூபாய் வழங்கப்படும். குறிப்பாக, இரண்டாவது திருமணம் செய்யும் விதவை தொழிலாளர்களுக்கும், திருமண உதவி வழங்கப்படும். ஓராண்டுக்கு குறைவாக பணியாற்றினால், இச்சலுகை கோர முடியாது.
அடையாள அட்டை திருப்பூரில், வெளிமாவட்ட, வெளிமாநில தொழிலாளர்கள் அதிகம் பணியாற்றுகின்றனர். பாதுகாப்பு நலன்கருதி, தொழிலாளருக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.
தற்போதைய சம்பள உயர்வு ஒப்பந்தத்தில், அனைத்து தொழிலாளர்களுக்கும், அடையாள அட்டை வழங்கலாம் என, உற்பத்தியாளர் சங்கங்களும் முன்வந்துள்ளன.
குரூப் இன்சூரன்ஸ் தொழிலாளர்களுக்கு, இ.எஸ்.ஐ., - பி.எப்., சலுகை கட்டாயமாகிறது. அச்சலுகை பெற முடியாதவர்களுக்கு, குரூப் இன்சூரன்ஸ் சலுகை வழங்கப்படும்.
அதன்படி, குறைந்தபட்சம், ஆறு மாதங்களுக்கு மேல் பணியாற்றும் தொழிலாளருக்கு மட்டும், ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள குழு காப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ பரிசோதனை தொழிலாளர் நலன்கருதி, குறிப்பிட்ட இடைவெளியில், தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்து, இலவச பொது மருத்துவ முகாம் நடத்தவும், உற்பத்தியாளர்கள் முன்வந்துள்ளனர்.
ஒப்பந்தத்தை விட கூடுதல் சம்பளம் பெற்று வந்தாலும், அதிலிருந்து சம்பள உயர்வை வழங்க வேண்டும். புதிய ஒப்பந்தம், 2026 மார்ச் 17 முதல், 2030 மார்ச் 16ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும். இருதரப்பினர் பேசி முடித்த ஒப்பந்தம், 1947 தொழிற்தகராறுகள் சட்ட பிரிவு 18 (1)ன் கீழ் பதிவு செய்து கொள்வது எனவும் தீர்மானித்துள்ளனர்

