ADDED : அக் 11, 2025 11:03 PM
திருப்பூர்:வரும், 20ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. திருப்பூரில் வசிப்பவர்கள் தங்கள் சொந்த மாவட்டங்களுக்கு செல்ல வசதியாக, 16ம் தேதி இரவு முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
கோவில்வழி பஸ் ஸ்டாண்டில் இருந்து மதுரை, தேனி, நாகர்கோவில், திருநெல்வேலி, கம்பம், சிவகங்கை உட்பட தென்மாவட்டங்களுக்கு, 160; மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து சேலம், திருவண்ணாமலை, அரூர் உள்ளிட்ட இடங்களுக்கு, 130; புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, புதுக்கோட்டை, பரமக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு, 140 என மொத்தம், 430 பஸ்கள் இயக்கப்படும். மக்கள் கூட்டத்துக்கேற்ப வரும், 16 முதல், 19ம் தேதி வரை நான்கு நாட்களும் சென்னை - திருப்பூர், திருப்பூர் - சென்னை இடையே, 10 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:
அக்., 18, 19 ஆகிய தேதிகளில், அதிகளவில் மக்கள் கூட்டம் இருக்கும் என்பதால், அன்றைய தினம் முழு அளவில் சிறப்பு பஸ் இயக்கப்படும். வெளியூர் சென்றவர் திருப்பூர் திரும்ப, 22 முதல், 24 வரை சிறப்பு பஸ் இயக்கப்படும். டிக்கெட் முன்பதிவு, விரைவு போக்குவரத்து கழக பஸ்களில், 90 நாட்களுக்கு முன்பே துவங்கி முடிந்த நிலையில், சிறப்பு பஸ்களில் பயணிப்பவர் முன்பதிவு செய்ய ஏதுவாக, கோவில்வழி அல்லது மத்திய பஸ் ஸ்டாண்டில் டிக்கெட் முன்பதிவு மையம் திறக்கப்படும். வரும் 16ம் தேதி முதல் முன்பதிவு மையம் செயல்பட உள்ளது.