/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பொதுத்தேர்வுக்காக சிறப்பு வகுப்புகள்
/
பொதுத்தேர்வுக்காக சிறப்பு வகுப்புகள்
ADDED : பிப் 09, 2026 06:29 AM
உடுமலை: மார்ச் முதல் வாரம் பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்க உள்ள நிலையில், மேல்நிலைப் பள்ளிகளில் இரவு வரை சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச், 2ல் துவங்குகிறது; முதல் நாள் தமிழ்; 5ம் தேதி ஆங்கிலம்; 9ம் தேதி முதல் முக்கிய பாடங்களுக்கான தேர்வுகள் துவங்குகிறது. தொடர்ந்து, 26ம் தேதி வரை தேர்வுகள் நடக்கிறது.
திருப்பூர் மாவட்டத்தில், 26 ஆயிரத்து, 461 மாணவ, மாணவியர் பிளஸ் 2 தேர்வை எழுத உள்ளனர்.
தேர்வுக்கு இன்னும் மூன்று வாரங்கள் உள்ள நிலையில், பாடங்கள் முழுமையாக முடிக்கப்பட்டு, ஜன., இறுதி முதலே திருப்புதல் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.
கல்வியில் பின்தங்கியுள்ள மாணவ, மாணவியரை பொதுத்தேர்வுக்கு தயார்படுத்தும் முயற்சியில், மாவட்ட கல்வித்துறை வேகமாக இறங்கியுள்ளது.
மேல்நிலை, உயர்நிலை பள்ளிகளில் தலைமை ஆசிரியர், வகுப்பாசிரியர், முக்கிய பாடங்களுக்கான ஆசிரியர் கொண்ட மதிப்பீட்டு குழு அமைக்கப்பட்டு, சிறப்பு வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன.
டிச. மாதம் முதலே சிறப்பு வகுப்பு பள்ளி முடிந்த பின் மாலை, 6:00 மணி வரை நடந்து வந்தது. தேர்வுக்கு ஒரு மாதம் மட்டுமே இருப்பதால், இரவு 7:30 மணி வரை சிறப்பு வகுப்புகள் நடக்கிறது.
மின்னொளியில் மாணவ, மாணவியர் பாடங்களை படித்து தேர்வுக்கு தயாராகின்றனர். இன்று (9ம் தேதி) பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கான செய்முறை தேர்வுகள் மாவட்டத்தில் துவங்க உள்ளது. இதற்காக கம்ப்யூட்டர் அறை, ஆய்வகங்கள், கூடங்கள் தயார்படுத்தும் பணி முழுவீச்சில் நடந்தது.

