
மணிவண்ணன், தமிழ்த்துறை தலைவர், அவிநாசி அரசு கலைக்கல்லுாரி:
'ஓய்தல் ஒழி' என்ற ஆத்திசூடி, மகாகவி பாரதியின் பணிகளை சுட்டிக் காட்டுவதாகவும், சமூகத்தின் பணிகளை தொட்டுக்காட்டுவதாகவும் இருக்கிறது. ஒரு வேலையை எடுத்து செய்யும் போது, ஈடுபாடுடன், இடைவிடாமல் செய்ய வேண்டும். வேலை என்பது, நம் ஆன்ம திருப்திக்காக, நம் பொருளாதார வளர்ச்சிக்காக செய்வது; தொழில் என்பது நமக்கும், அடுத்தவர்களுக்கும் பயன் பெறும்படி செய்வது.'நமக்கு தொழில் கவிதை; நாட்டுக்கு உழைத்தல்; இமைப்பொழுதும் சோராது இருத்தல்' என்ற தனது பணிகளை பாரதி வரிசைப்படுத்தினான்; இவை மூன்றும் தான், 'ஓய்தல் ஒழி' என்ற வார்த்தையில், பாரதி சுட்டிக்காட்டுவது. பாரதி வாழ்ந்த காலத்தில் இந்தியா, வெள்ளையரிடம் அடிமைப்பட்டு கிடந்தது; பொருளாதார ஏற்றத்தாழ்வு இருந்தது; ஜாதி வெறி தலைவிரித்தாடியது; பெண்ணடிமைத்தனம் உச்சத்தில் இருந்தது.
இந்த நான்கு விஷயத்துக்கும் விடுதலை வேண்டும் என நினைத்தவர் பாரதியார். அதற்கு அவர் செய்த புரட்சி ஆயுதம் தான் கவிதை. 'எனக்குத் தொழில் கவிதை' என அவர் சுட்டிக்காட்டவில்லை. 'நமக்குத் தொழில் கவிதை' என்று தான் சொன்னார். அனைத்து துறைகளிலும் தேசம் முன்னேற ஓய்வில்லாமல் பணி செய்ய வேண்டும் என்பதே இந்தக் கருத்து.

