/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நவீன இந்தியாவை நோக்கி மாணவர்கள்; அடல் டிங்கரிங் லேப்' திட்டம்
/
நவீன இந்தியாவை நோக்கி மாணவர்கள்; அடல் டிங்கரிங் லேப்' திட்டம்
நவீன இந்தியாவை நோக்கி மாணவர்கள்; அடல் டிங்கரிங் லேப்' திட்டம்
நவீன இந்தியாவை நோக்கி மாணவர்கள்; அடல் டிங்கரிங் லேப்' திட்டம்
ADDED : மே 18, 2025 01:03 AM
திருப்பூர்: இந்தியாவின் எதிர்காலத்தை சிறப்பாக கட்டமைக்கும் வகையில், மாணவர்களின் ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு மற்றும் புதிய தொழில்நுட்பங்களைப் பற்றிய புரிதலை மேம்படுத்தும் முயற்சியாக, 'அடல் டிங்கரிங் லேப்' திட்டம் துவக்கப்பட்டது.
ஆறாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை பயிலும் மாணவ, மாணவியர், தொழில் மேம்பாடு, அறிவியல் சிந்தனை, '3டி' பெயின்டிங், 'ஏஐ' தொழில்நுட்பம், 'ரோபாட்டிக்ஸ்' போன்ற துறைகளில், புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கிறது.
78 பள்ளியில் மட்டும்
----------------
திருப்பூரில் உள்ள, 1,200க்கும் மேற்பட்ட பள்ளிகளில், 78 பள்ளிகளில் மட்டுமே, 'அடல் டிங்கரிங் லேப்' வசதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில், 1,200க்கும் அதிகமான பள்ளிகள் இருந்தும், இந்த ஆய்வக வசதி செய்யப்படாததால், சம வாய்ப்பு கிடைக்காதுதான் என்று மாணவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
--திருப்பூரில் உள்ள மாணவர்கள் ஏற்கனவே தொழில்துறை சுற்றுச்சூழலில் வளர்கிறார்கள். அவர்களுக்கு தொழில்நுட்பங்களை கற்றுக்கொடுக்க, கம்ப்யூட்டர் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் சூழல் அவசியம் .
அவிநாசி, உத்துக்குளி, காங்கயம் பகுதிகள், கிராமப்புறம் சார்ந்த பகுதியாக உள்ளன. அப்பகுதி மாணவர்களுக்கும் அதிநவீன தொழில்நுட்பத்தை வளர்க்க, 'அடல் டிங்கரிங் லேப்' என்ற ஆய்வக வசதியை உருவாக்க வேண்டும்.
கண்டுபிடிப்பு திறமை
-----------------
நுாற்பாலை, ஆடை உற்பத்தி போன்ற துறைகளுடன் இணைந்து, மாணவர்களின் புதிய கண்டுபிடிப்பு திறமையை வளர்க்கலாம். கம்ப்யூட்டர், செயற்கை நுண்ணறிவு, 'மைக்ரோ கன்ட்ரோலர்' போன்ற தொழில்நுட்பங்களை மாணவர்கள் கற்றுக்கொண்டு நேரடி தொழில் வாய்ப்புகளுக்கு தயாராகலாம்.
-மாணவர்கள், விஞ்ஞானம், கணிதம், தொழில்நுட்பம் ஆகியவையின் அடிப்படை ஒழுங்குகளை புரிந்துகொள்ள வாய்ப்பு கிடைக்கும். அடிப்படை கருவிகளை வைத்தே செயற்கை நுண்ணறிவு, இயந்திரக் கற்றல் போன்றவையில் ஆர்வத்தை வளர்க்கலாம். மாணவர்கள், பள்ளி கல்வியின் போதே, எதிர்கால தொழில்திட்டங்களை உருவாக்க முடியும்.
ரூ.20 லட்சம் மானியம்
------------------
'அடல் டிங்கரிங் லேப்' அமைக்க, மத்திய அரசு, 20 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கி ஊக்குவிக்கிறது. அத்திட்டத்தை துவக்கிய பள்ளிகளிலும், உபகரணங்கள் வீணாக உள்ளன. ஆசிரியர்களுக்கும் தேவையான பயிற்சி இல்லாததால், பெயர் அளவுக்கு மட்டுமே, இயங்குகின்றன.
பள்ளிகளில் உள்ள 'அடல் டிங்கரிங் லேப்'கள், மாணவர்கள் பயன்பாடு, முன்னேற்றம் குறித்த எவ்வித கண்காணிப்பும் இல்லை. அரசு பிரதிநிதிகள், மக்கள் பிரதிநிதிகள் இணைந்து, பயனுள்ள இத்திட்டத்தை மாணவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.
ஒவ்வொரு வட்டாரத்திலும் ஒரு மாதிரிப்பள்ளி உருவாக்கப்பட வேண்டும். 'லேப்'களை கண்காணிக்க, மாவட்ட குழு அமைக்க வேண்டும். கோவை, திருப்பூர் பகுதிகளில் உள்ள தொழில்நுட்ப கல்லுாரிகளுடன் இணைந்து, ஆய்வகத்தை செயல்படுத்த திட்டமிடலாம்