/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விசைத்தறியாளர் கோரிக்கைகள் சமர்ப்பிப்பு
/
விசைத்தறியாளர் கோரிக்கைகள் சமர்ப்பிப்பு
ADDED : ஜன 19, 2026 06:11 AM
பல்லடம்: சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும், தேர்தல் அறிக்கை குழு அமைத்து, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
தேர்தல் அறிக்கையில் தங்கள் வாக்குறுதிகளும் இடம்பெற வேண்டும் என்ற நோக்கத்தில், விசைத்தறி உரிமையாளர்கள், தங்கள் கோரிக்கை மனுவை, தேர்தல் அறிக்கை குழுவிடம் அளிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். 'அனைத்து, 3ஏ2 விசைத்தறி கூடங்களுக்கும், 2 ஆயிரம் யூனிட் இலவச மின்சாரம் வழங்க வேண்டும். விசைத்தறி, கைத்தறி, பெடல் தறி மற்றும் நவீன தறிகள் குறித்து முறையான கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.
அரசு ஊழியர்களுக்கான சீருடைகளை விசைத்தறிகளில் மட்டுமே உற்பத்தி செய்ய வழிவகுக்க வேண்டும். கைத்தறிகளைப் போல், விசைத்தறிகளுக்கும் ரக ஒதுக்கீடு கொண்டுவர வேண்டும். நெட் மீட்டர் வசதியுடன், 50 சதவீத மானியத்தில் சோலார் பேனல் அமைத்து தர வேண்டும்.
பாலிதீன் பைகளை முழுமையாக தடை செய்து, துணிப்பைகளின் பயன்பாட்டை அதிகரிப்பதன் மூலம், விசைத்தறி தொழில் மேம்படும்' என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் மனுவில் இடம்பெற்றுள்ளன.
தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், மனு தயாரிக்கப்பட்டது.
இதை, செயலாளர் வேலுசாமி, மண்டல பொறுப்பாளர் அப்புகுட்டி, ஈரோடு சங்க நிர்வாகிகள் ராசு மற்றும் தியாகு, விஸ்வநாதன் ஆகியோர் தலைமையிலான குழு, அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை குழுவினரை சந்தித்து தங்கள் கோரிக்கை மனுவை அளித்தனர்.
அனைத்துக் கட்சிகளின் தேர்தல் அறிக்கை குழுவிடமும் கோரிக்கை மனுவை அளிக்கவும் விசைத்தறியாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

