/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரூ.81 கோடியில் புதுப்பித்த தார் சாலையில் திடீர் விரிசல்
/
ரூ.81 கோடியில் புதுப்பித்த தார் சாலையில் திடீர் விரிசல்
ரூ.81 கோடியில் புதுப்பித்த தார் சாலையில் திடீர் விரிசல்
ரூ.81 கோடியில் புதுப்பித்த தார் சாலையில் திடீர் விரிசல்
ADDED : ஜன 30, 2026 05:30 PM

திருப்பூர்: அவிநாசி - மேட்டுப்பாளையம் இடையே, 81 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்ட தார் சாலை, ஒரு வாரத்துக்குள் பெயர்ந்து சேதமடைந்திருப்பது, வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியையும், அரசின் மீது அவப்பெயரையும் ஏற்படுத்தி வருகிறது.
திருப்பூர், ஈரோடு, சேலம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து, மேட்டுப்பாளையம், ஊட்டி செல்வதற்கு, அவிநாசி - மேட்டுப்பாளையம் சாலை முக்கிய வழித்தடமாக இருக்கிறது. ஆயிரக்கணக்கான வாகனங்கள், மேட்டுப்பாளையத்தில் இருந்து அன்னுார், அவிநாசி வழியாக செல்கின்றன.
கோடை சீசன் சமயத்தில் சமவெளி பகுதிகளில் இருந்து ஊட்டிக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணியரின் பிரதான சாலையாகவும் இருந்து வருகிறது. தேசிய நெடுஞ்சாலை வசமிருந்த இந்த சாலை, நீண்ட முயற்சிக்கு பின், மாநில நெடுஞ்சாலை வசம் ஒப்படைக்கப்பட்டது. இதனால், இரு வழிப்பாதையாக இருந்த அவிநாசி - மேட்டுப்பாளையம் இடைபட்ட, 38 கி.மீ., சாலை, 250 கோடி ரூபாய் செலவில் நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணி, சில மாதமாக நடந்து வருகிறது.
இதில், ஆட்டையம்பாளையம் துவங்கி, நரியம்பள்ளி வரை, 81 கோடி ரூபாய் செலவில் சாலை விரிவாக்கப்பணி நடந்து வருகிறது. இதில், நரியம்பள்ளி பகுதியில், ஒரு வாரத்துக்கு முன் போடப்பட்ட தார் சாலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது; பல்வேறு இடங்களில், இதுபோன்ற நிலை தான் உள்ளது.
காரணம் என்ன? பெயர் கூற விரும்பாத பொறியாளர்கள் சிலர் கூறியதாவது:
ஏற்கனவே உள்ள தார் சாலையில் புதிதாக தார் ஊற்றும் போது, அந்த சாலையில் உள்ள மண், துாசு உள்ளிட்டவை முற்றிலுமாக சுத்தம் செய்துவிட்டு, அதன் மீது 'எமல்ஷன்' என்ற திரவத்தை ஊற்றுவார்கள். அந்த திரவம் வெயிலில் காய்ந்து கருப்பு நிறமாக மாறி, இறுகும் தன்மையை பெறும். அந்த திரவத்தின் மீது புதிதாக தார் ஊற்றும்போது தான், அது ஏற்கனவே உள்ள தாரின் மீது இறுகப்பிடித்து உறுதித்தன்மையுடன் இருக்கும்.
அந்த 'எமல்ஷனில்' அளவுக்கு அதிகமாக தண்ணீர் கலந்தாலோ, சாலையில் மண், துாசு இருந்தாலோ, அதன் மீது புதிதாக போடப்படும் தார் பெயர்ந்து விடும்; தார் தரமற்றதாக போய்விடும். அந்த திரவம் காயாமல், அவசர கதியில் சாலைப் பணி மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், இதுபோன்ற பிரச்னை ஏற்படும் வாய்ப்புண்டு.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

