ADDED : செப் 29, 2025 12:25 AM

திருப்பூர்; நிப்ட்-டீ பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில், ஈஸ்ட்மேன் எக்ஸ்போர்ட்ஸ் அணி, அதிரடி காட்டியது.
பின்னலாடை நிறுவன அணிகளுக்கு இடையிலான 'நிப்ட்-டீ பிரீமியர் லீக்' கிரிக்கெட் தொடர், முதலிபாளையம் நிப்ட்-டீ கல்லுாரி மைதானத்தில் கடந்த மாதம் முதல் நடைபெற்றுவருகிறது. அப்துல்கலாம் நினைவு சுழற்கோப்பைக்கான இந்த போட்டியை, நிப்ட்-டீ கல்லுாரியுடன், 'தினமலர்' நாளிதழ் மற்றும் டெக்னோ ஸ்போர்ட் இணைந்து நடத்துகின்றன.
முதலாவதாக, 15 ஓவருடன் லீக் போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. 21 பின்னலாடை நிறுவன அணிகள் களத்தில் மோதிவருகின்றன. தொழிலாளர் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை தோறும் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
நேற்று, நான்கு போட்டிகளில், எட்டு அணிகள் மோதும்வகையில் பட்டியல் தயாரிக்கப்பட்டிருந்தது. மூன்று அணிகள் பங்கேற்காததால், எதிர் அணிகள் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
அந்தவகையில், அமேசிங் எக்ஸ்போர்ட்ஸ், விக்டஸ் டையிங், பிராச்சி எக்ஸ்போர்ட்ஸ் அணிகள் போட்டியின்றி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
நான்காவது போட்டியில், ஈஸ்ட்மேன் எக்ஸ்போர்ட்ஸ் - தினேஷ் டெக்ஸ்டைல்ஸ் மில்ஸ் அணிகள் மோதின. 'டாஸ்' வென்று முதலில் பேட்டிங் செய்த ஈஸ்ட்மேன், 7 விக்கெட் இழப்புக்கு, 136 ரன் விளாசியது. வீரர் விஜய், அதிரடியாக விளையாடி, 31 பந்துக்கு, 52 ரன் எடுத்தார். இவர், 5 பவுண்டரியும், 2 சிக்ஸரும் அடித்தார்.
அடுத்ததாக பேட்டிங் செய்த தினேஷ் டெக்ஸ்டைல்ஸ் மில்ஸ் அணி, 8 விக்கெட் இழப்புக்கு, 77 ரன்னில் ஆட்டமிழந்தது. வெற்றிபெற்ற ஈஸ்ட்மேன் எக்ஸ்போர்ட்ஸ் அணியின் வீரர் விஜய், ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.