ADDED : ஜன 15, 2024 01:35 AM
திருப்பூர்;பொங்கல் பண்டிகை தினமான இன்று, திருப்பூருக்கு மகிழ்ச்சி தரும் செய்தியைச் சொல்வது, இனிப்பான பொங்கலைச் சுவைத்த மகிழ்ச்சியை தரும் அல்லவா! உள்நாட்டு விற்பனைக்கான, கோடைக்கால பின்னலாடை ஆர்டர் மீதான விசாரணை சூடுபிடித்துள்ளதால், 'சாம்பிள்' ஆடை தயாரிக்கும் பணியை உற்பத்தியாளர்கள் முன்கூட்டியே துவங்கிவிட்டனர் என்பதுதான் அந்த மகிழ்ச்சிகரமான செய்தி.
திருப்பூர் பின்னலாடைத் தொழிலில், ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு வர்த்தகம், இரு கண்களை போன்றது. ஏற்றுமதி வர்த்தகம், பல்வேறு நாடுகளுடன் தொடர்புடையது என்பதை போலவே, உள்நாட்டு பின்னலாடை வர்த்தகமும், டில்லி வரை உள்ள பல்வேறு மாநிலங்களுடன் தொடர்பு கொண்டுள்ளது.
பஞ்சு மற்றும் நுால் விலை உயர்வின் போது பாதிக்கப்பட்ட உள்நாட்டு பின்னலாடை வர்த்தகம், படிப்படியாக பாதிப்பில் இருந்து மீண்டு வந்துள்ளது. அபரிமிதமான மின்கட்டண உயர்வு, பெரும் சவாலாக இருந்தாலும், பின்னலாடை உற்பத்தியாளர்கள் கடும் போட்டிக்கு இடையே, வர்த்தகம் செய்து வருகின்றனர்.
உள்நாட்டு சந்தையில் போட்டி
ஏற்றுமதியாளர்கள் சந்திப்பதைப் போலவே, பாலியஸ்டர் ஆடை உற்பத்தியும், வரத்தும் அதிகரித்துள்ளதால், வெளிமாநில உற்பத்தியாளர்களுடன், திருப்பூர் போட்டியிட வேண்டிய நிர்பந்தமும் ஏற்பட்டுள்ளது. பின்னலாடை உற்பத்தியில் கைதேர்ந்த திருப்பூர் நிறுவனங்கள், பாலியஸ்டர் ஆடை உற்பத்தியிலும் கால் பதிக்க துவக்கிவிட்டன.
'லுாப் நெட்' ஆடைகள்
நீண்ட இடைவெளிக்கு பிறகு, 'லுாப்நெட்' எனப்படும் குளிர்கால ஆடை உற்பத்தி மற்றும் வர்த்தகம் சூடுபிடித்துள்ளது. கடந்த காலங்களை காட்டிலும், குளிர்கால ஆர்டர் கிடைத்து, ஆடைகளை உற்பத்தி செய்து அனுப்பினர். ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள் விற்பனை பாதித்ததால், இந்தாண்டு கோடைக்கால வர்த்தகம் வசந்தம் வீசுவதாக இருக்கும் என நம்புகின்றனர்.
கோடைக்கால வர்த்தகம்
அதற்கு அச்சாரமாக, டில்லி, குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, தெலுங்கானா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள், கோடைகால ஆர்டர் விசாரணையை முன்கூட்டியே துவக்கிவிட்டனர். வழக்கமாக, பிப்., மாதம் நடக்கும் வர்த்தக பேச்சுவார்த்தை, இந்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு முன்பாகவே துவங்கியுள்ளது, பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
திருப்பூரில் உற்பத்தியாகும், பருத்தி நுாலிழை பின்னலாடைகள், கோடைக்கால விற்பனையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. வடமாநில மக்கள், கோடையை சமாளிக்க, திருப்பூர் பின்னலாடைகளை விரும்பி அணிவது வழக்கம். அந்தவகையில், மார்ச் துவங்கி ஜூன் மாதம் வரையிலான, நான்கு மாத கோடை விற்பனைக்காக, ஆர்டர் விசாரணை சாதகமாக அமைந்துள்ளது.
சோதனைகள் மறைகிறது
திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்கள் கூறியதாவது:
உள்நாட்டு விற்பனைக்கான பின்னலாடை ஆடை உற்பத்தியில், கோடைக்கால வர்த்தகம் என்பது மிக முக்கியானது. கடந்த ஆண்டுகளில் சுணக்கமான வர்த்தகம் நடந்ததால், இந்தாண்டு முன்கூட்டியே விசாரணை துவங்கியது. அதுமட்டுமல்ல, 'சாம்பிள்' ஆடை தயாரிப்பு பணியும் துவங்கிவிட்டது.
இம்மாத இறுதிக்குள், சாம்பிள் ஆடைகளை அனுப்பி, ஒப்புதல் பெறவும் முயற்சி நடக்கிறது. அதற்கு பிறகு, முழு வேகத்தில கோடைக்கால ஆடைகள் உற்பத்தி துவங்கும். கடந்த இரண்டு ஆண்டுகளாக கடும் சோதனைகளை சந்தித்து வந்த நிலையில், இந்தாண்டு கோடைக்கால ஆர்டர் மீதான உற்பத்தி சுறுசுறுப்படையும்.