/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கேள்வி
/
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கேள்வி
ADDED : ஜூலை 06, 2024 05:36 PM
காங்கேயம்: தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் நிறுவனர் ஈசன் முருகசாமி கூறியுள்ளதாவது: தமிழகத்தில் தினசரி 2 கோடியே 10 லட்சம் லிட்டர் பால் உற்பத்தியாகிக் கொண்டிருக்கிறது. அதில் தமிழக அரசின் ஆவின் நிறுவனம் 33 லட்சம் லிட்டர் மட்டுமே கொள்முதல் செய்கிறது.மொத்த உற்பத்தியில் 15 சதம் மட்டுமே, மீதமுள்ள 85 சதவீத பால் உற்பத்தியை 30க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கொள்முதல் செய்து வருகின்றன. தனியார் நிறுவனங்கள் அதிக லாபம் கிடைக்கும் போது விவசாயிகளுக்கு லாபத்தில் பங்கும் கொடுப்பதில்லை, விலையும் கூடுதலாக கொடுப்பதில்லை. ஆனால் தற்சமயம் பால் பொருட்களின் விற்பனை குறைந்துள்ளது என்ற காரணத்தை சொல்லி கொள்முதல் விலையை குறைத்து விவசாயிகளின் வயிற்றில் அடித்துள்ளார்கள்.
தமிழக பால்வளத்துறை அமைச்சர் 15 சதம் மட்டுமே கொள்முதல் செய்யும் அரசின் நிறுவனமான ஆவினுக்கு மட்டுமான அமைச்சராகவே செயல்பட்டு வருகிறார். பால்வளத்துறையும் அதே அடிப்படையில் செயல்படுகிறது. 85 சதவீதம் பால் உற்பத்தியை தனியார் நிறுவனங்கள் கொள்முதல் செய்து வரும் சூழலில், நிறுவனங்கள் தற்போது கொள்முதல் விலையை குறைத்துள்ளன. விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து, தனியார் நிறுவனங்களை அழைத்து எச்சரித்து, குறைக்கப்பட்ட பால் விலையை உயர்த்திக் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் அந்த நிறுவனங்களை தமிழகத்தில் செயல்பட அனுமதிக்க கூடாது என்கிற நிலைப்பாட்டை எடுத்து அறிவிக்க வேண்டும் என 20 லட்சம் பால் விவசாயிகள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். பல்வேறு மாவட்டங்களில் கொள்முதல் நிலையங்களையும் தனியார் நிறுவனங்கள் அறிவிப்பு இல்லாமல் மூடி வருகிறார்கள். 20 லட்சம் பால் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்றுவதற்கு உரிய நடவடிக்கை விரைந்து எடுக்க வேண்டும். உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தலைமைச் செயலகத்தின் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் தெரிவ்வதார்.