/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'தட்கல்' மின் இணைப்பு விவசாயிகள் ஏமாற்றம்
/
'தட்கல்' மின் இணைப்பு விவசாயிகள் ஏமாற்றம்
ADDED : டிச 19, 2025 06:42 AM
பல்லடம்: தமிழகம் முழுவதும், விவசாய மின் இணைப்பு கேட்டு காத்திருக்கும் விவசாயிகளின் வசதிக்காக, 2 நாட்களுக்கு முன், தட்கல் திட்டத்தில் மின் இணைப்பு வழங்க இலக்கு வழங்கப்பட்டது. அதன்படி, 5 எச்.பி. முதல் 15 எச்.பி. வரை மின் இணைப்பு பெற, 2.50 லட்சம் ரூபாய் முதல், 4.00 லட்சம் ரூபாய் வரை செலுத்த வேண்டும்.
ஏராளமான விவசாயிகள் மின் இணைப்பு பெற ஆர்வம் காட்டினர். நேற்று, திடீரென ஆன்லைன் பதிவு முடங்கியதால், விவசாயிகள், விண்ணப்பம் பெற முடியாது என்று கூறி திருப்பி அனுப்பப்பட்டனர்.
பல்லடம் மின்வாரிய செயற்பொறியாளர் பழனிசாமியிடம் கேட்டதற்கு, ''தமிழகம் முழுவதும், 10 ஆயிரம் தட்கல் மின் இணைப்புகளுக்கு மட்டுமே இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதன்படி, பல்லடம் வட்டார விவசாயிகளிடம், 101 விண்ணப்பங்கள் பெறப்பட்டு இறுதி செய்யப்பட்டன. ஆன்லைன் பதிவு முறை பயன்பாட்டுக்கு வந்தால் மட்டுமே, விண்ணப்பங்களை பதிவு செய்ய முடியும்,'' என்றார்.
பல்லடம் வட்டார விவசாயிகள் கூறுகையில், 'துவங்கிய இரண்டே நாளில், விண்ணப்பிக்க முடியாதபடி, ஆன்லைன் பதிவு முடங்கியது. ஏற்கனவே, மழை குறைவு காரணமாக, தண்ணீர் இல்லாமல் பரிதவித்து வருகிறோம். எனவே, இத்திட்டத்தில் கூடுதல் மின் இணைப்புகள் வழங்க வேண்டும்,' என்றனர்.

