/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வளரிளம் பருவத்தினர் திருமணங்கள் அதிகரிப்பு?
/
வளரிளம் பருவத்தினர் திருமணங்கள் அதிகரிப்பு?
ADDED : ஆக 09, 2024 02:15 AM
திருப்பூர்;திருப்பூர் மாவட்டத்தில், 15 முதல் 18 வயது வரையிலான வளரிளம் பருவப் பெண்கள் திருமணங்கள் அதிகரித்துள்ளன. இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.
பெண்ணின் திருமண வயது 18; ஆணிண் வயது, 21; 16 வயதுக்கு குறைவாக இருந்தால், அது குழந்தை திருமணம்; 15 முதல், 18 வயது வரை வளரிளம் பருவம். தமிழகத்தில், சராசரியாக ஆண்டுக்கு, 2,000 குழந்தை திருமணங்களுக்கான முயற்சி, அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறது; மாநிலத்தில் கடந்த மூன்றாண்டுகளில், ஏழாயிரத்துக்கும் அதிகமான குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, அவற்றில், 2,500க்கும் மேற்பட்ட குழந்தை திருமணங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில், குறிப்பாக, உடுமலை பகுதியில் உள்ள கிராமங்களில் குழந்தை, வளரிளம் பருவத்தினர் மத்தியிலான திருமணம் அதிகரித்திருக்கிறது. சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதால், இவை வெளிப்படையாகத் தெரிவிப்பதில்லை. சமூக நலத்துறை வாயிலாக கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
விழிப்புணர்வு இல்லை
சமூக கல்வி மற்றும் முன்னேற்ற மையம் (சி.எஸ்.இ.டி.,) இயக்குனர் நம்பி கூறியதாவது:குழந்தை மற்றும் வளரிளம் வயதினருக்கான திருமணங்கள் முற்றிலும் குறைந்து விட்டது என சொல்ல முடியாது; ஆங்காங்கே, பரவலாக நடந்து கொண்டு தான் இருக்கின்றன. வளரிளம் பருவத்தில் திருமணம் செய்து கொள்வதால் உடலில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு, பெற்றோர், வளரிளம் பெண்கள் மத்தியில் இல்லை.
இவ்வாறு திருமணம் செய்துகொண்டால், பிற்காலத்தில் அவர்களுக்கு உடல் மற்றும் மன ரீதியான பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது. ஆண்களுக்கு நிகராக பெண்களும் தற்போது சமூகத்தில் பல பொறுப்புகளை வகிக்கின்றனர்; வெளியே வருகின்றனர். இதை பெற்றோர் ஊக்குவித்தாலும், அவர்கள் மத்தியில் ஒரு வித பயம் இருக்கத்தான் செய்கிறது. அதன் விளைவு, விரைவில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி விடுகிறது.
உறுதி தேவை
'என் உடல்; என் உரிமை' என்ற விழிப்புணர்வுடன் திருமண வயது வரை திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை என்ற உறுதியான நிலைப்பாட்டை வளரிளம் ஆண்கள் மற்றும் பெண்கள் எடுத்தால், வளரிளம் பருவ திருமணங்களை தவிர்க்க முடியும். விழிப்புணர்வு ஏற்படுத்துவது, சட்ட நடவடிக்கை எடுப்பது போன்ற பணிகளில் சமூகநலத்துறையினரும் கவனம் செலுத்த வேண்டும். சட்டத்தால் மட்டும் குழந்தை மற்றும் வளரிளம் ஆண், பெண்களின் திருமணத்தை தடுத்து நிறுத்த முடியாது; தனிப்பட்ட விழிப்புணர்வும் அவசியம்.
இவ்வாறு, நம்பி கூறினார்.