/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'உங்கள் கனவை சொல்லுங்கள்' புதிய திட்டம்; 6.8 லட்சம் குடும்பத்தினரிடம் கணக்கெடுப்பு
/
'உங்கள் கனவை சொல்லுங்கள்' புதிய திட்டம்; 6.8 லட்சம் குடும்பத்தினரிடம் கணக்கெடுப்பு
'உங்கள் கனவை சொல்லுங்கள்' புதிய திட்டம்; 6.8 லட்சம் குடும்பத்தினரிடம் கணக்கெடுப்பு
'உங்கள் கனவை சொல்லுங்கள்' புதிய திட்டம்; 6.8 லட்சம் குடும்பத்தினரிடம் கணக்கெடுப்பு
ADDED : ஜன 10, 2026 06:59 AM

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில், 'உங்கள் கனவை சொல்லுங்கள்' திட்டத்தில், 6 லட்சத்து 80 ஆயிரத்து 66 குடும்பத்தினரின் வீடு தேடிச் சென்று, கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. இதற்கான களப்பணிகளில், 1,379 தன்னார்வலர்கள், ஈடுபடுத்தப்படுகின்றனர்.
தமிழகம் முழுவதும் உள்ள 1.91 கோடி குடும்பத்தினரை வீடு தேடிச் சென்று சந்தித்து, அவர்களது கனவை அறியும், 'உங்கள் கனவை சொல்லுங்கள்' திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின், திருவள்ளூர் மாவட்டத்தில், காணொலி காட்சி வாயிலாக, துவக்கி வைத்தார். திருப்பூர் மாவட்டத்தில், காங்கயத்தில் உள்ள மஹாராஜா மண்டபத்தில் இதற்கான விழா நடைபெற்றது. அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி, கலெக்டர் மனிஷ் நாரணவரே ஆகியோர் தலைமை வகித்தனர்.
அமைச்சர் சாமிநாதன் பேசியதாவது:
தமிழகத்தில், 24 ஆயிரம் குடியிருப்புகள், 1.91 கோடி குடும்பங்கள் உள்ளன. ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒவ்வொரு கனவு இருக்கும். அதனை அறிந்துகொள்வதற்காக, பயிற்சி பெற்ற, 50 ஆயிரம் தன்னார்வலர்கள், வீடு தேடிச் சென்று கணக்கெடுப்பு நடத்த உள்ளனர். பத்து வகையான திட்டங்கள் அடங்கிய படிவம் கொடுக்கப்பட்டுள்ளது. எந்தெந்த திட்டங்களில் பயன்பெற்றுள்ளனர்; அவர்களின் மூன்று கனவுகள் என்ன என்கிற கேள்விகள் கேட்கப்படும்.
ஒவ்வொரு குடும்பத்தினருக்கும், படிவம் வழங்கப்பட்டு சேகரிக்கப்படும். படிவத்திலுள்ள விவரங்கள், மொபைல் போன் செயலி வாயிலாக, ஆன்லைனில் பதிவு செய்யப்படும். ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு எண்ணுடன் கூடிய கனவு அட்டை வழங்கப்படும்; அதில், ஆதார் உள்பட அனைத்து விவரங்களும் பெறப்படும்.
குடும்பத்தினரின் பொதுவான கனவு மட்டுமின்றி, 15 முதல் 29 வயது வரையிலான இளைஞர்களிடம், நான்கு கருத்துக்கள் கேட்கப்படும். வெளிநாடு வாழ் தமிழர்கள், இணையதளம் வாயிலாக கனவை தெரிவிக்கலாம்.
வரும் 2030ல், தமிழகத்தை 90 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருளாதாரம் உள்ள மாநிலமாக மாற்றுவதே இதன் முக்கிய நோக்கம்.
திருப்பூர் மாவட்டத்தில், ஊரக பகுதிகளில் 4 லட்சத்து 23 ஆயிரத்து 671 ரேஷன் கார்டு தாரர்களின் வீடு தேடிச்சென்று, கணக்கெடுக்கும் பணியில், தன்னார்வலர் 853 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். நகர பகுதிகளில், 2 லட்சத்து 56 ஆயிரத்து 995 ரேஷன் கார்டுதாரர் குடும்பத்தினரை, 526 தன்னார்வலர்கள், வீடு தேடிச் சென்று கணக்கெடுக்கின்றனர்.
இவ்வாறு, அவர் பேசினார்.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சங்கமித்திரை, மகளிர் திட்ட அலுவலர் சாந்தி, மண்டல குழு தலைவர்கள் கோவிந்தராஜ், உமாமகேஸ்வரி மற்றும் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

