/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தார் ரோடா... சகதிக்காடா; கிராம மக்கள் அதிருப்தி
/
தார் ரோடா... சகதிக்காடா; கிராம மக்கள் அதிருப்தி
ADDED : நவ 02, 2024 11:15 PM

பல்லடம்: தார் ரோடு, சகதிக்காடாக மாறியுள்ளது, செஞ்சேரிமலை பகுதி பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
சுல்தான்பேட்டை ஒன்றியம், செஞ்சேரிமலை -- வடவேடம்பட்டி செல்லும் ரோடு, மிகவும் மோசமாக சேதமடைந்துள்ளது. தார் ரோடு முற்றிலும் கரைந்து, தற்போது, இந்த ரோடு சகதிக்காடாக மாறியுள்ளது.
இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:
செஞ்சேரிமலையில் இருந்து குமாரபாளையம், செல்லியகவுண்டம்புதுார் வழியாக வடவேடம்பட்டி செல்லும், 7 கி.மீ., துாரமுள்ள கிராம சாலை, மிகவும் மோசமாக சேதமடைந்துள்ளது. பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட இந்த ரோடு, சிறிதுசிறிதாக கரைந்து, மண் ரோடாக மாறிவிட்டது. தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், ரோடு முழுவதும் சகதிக்காடாக உள்ளது.
விவசாயம் மற்றும் கறிக்கோழி உற்பத்தி தொழில் சார்ந்த வாகனங்கள், பள்ளி செல்லும் வேன்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்டவை அதிகளவில் இவ்வழியாக சென்று, அடிக்கடி பழுதாகின்றன. இவ்வாறு பல ஆண்டுகளாக மோசமான இந்த சாலையால் அவதிப்பட்டு வருகிறோம்.
இந்த ரோட்டை புதுப்பிக்க வலியுறுத்தி, கோவை கலெக்டர், பி.டி.ஓ., உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்து பல முறை கோரிக்கை மனு அளித்துள்ளோம். பல போராட்டம் நடத்தியும் எந்த நடவடிக்கையும் இல்லை. கிராம சாலை குறித்து கண்டுகொள்ளாத அதிகாரிகளின் இந்த செயல்பாடு அதிருப்தி அளிக்கிறது. மோசமாக உள்ள இந்த சாலையை உடனடியாக புதுப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.