/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'பி.ஏ.பி., வாய்க்கால்கள் சிதிலம் தண்ணீர் செல்வதோ கடினம்'
/
'பி.ஏ.பி., வாய்க்கால்கள் சிதிலம் தண்ணீர் செல்வதோ கடினம்'
'பி.ஏ.பி., வாய்க்கால்கள் சிதிலம் தண்ணீர் செல்வதோ கடினம்'
'பி.ஏ.பி., வாய்க்கால்கள் சிதிலம் தண்ணீர் செல்வதோ கடினம்'
ADDED : ஜூன் 27, 2025 11:43 PM
திருப்பூர்; ''தொகுப்பணைகள் வேகமாக நிரம்பிவருவதால், நுாறு நாள் வேலை திட்டத்தில், போர்க்கால அடிப்படையில் பாசன வாய்க்கால் துார்வாரும் பணிகளை மேற்கொள்ளவேண்டும்'' என, பி.ஏ.பி., பாசன விவசாயிகள் திருப்பூர் கலெக்டரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், கலெக்டர் மனீஷ் நாரணவரே தலைமையில் நேற்று நடைபெற்றது. பி.ஏ.பி., பாசன சங்க நிர்வாகிகள், திட்டக்குழு உறுப்பினர்கள், என, 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, பாசன வாய்க்கால்களை துார்வாரக்கோரி மனு அளித்தனர்.
கடைமடைக்கு
நீர் வரவில்லை
பி.ஏ.பி., பாசன விவசாயிகள் பேசியதாவது:
துார்வாரப்படாதபட்சத்தில், தண்ணீர் திறக்கவே முடியாதநிலையிலேயே பி.ஏ.பி., வாய்க்கால்கள் உள்ளன. பி.ஏ.பி.,-ல், கடைமடைக்கு போதிய தண்ணீர் வந்து சேரவில்லை; தண்ணீர் திருட்டு நடைபெறுகிறது என, காங்கயத்தில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 60 ஆண்டுகளாகிவிட்டதால், பி.ஏ.பி., வாய்க்கால்கள் சேதமடைந்துள்ளன. ஆங்காங்கே தண்ணீர் கசிவு அதிகரித்துள்ளது.
நவீன தொழில்நுட்பம் மூலம்
பி.ஏ.பி., தண்ணீர் திருட்டு
கான்கிரீட்டே இல்லாமல், 140 கி.மீ., துாரத்துக்கு முழுவதும் மண் வாய்க்காலிலேயே பயணிக்கிறது. இப்போதெல்லாம், குழாய் பதித்து தண்ணீர் திருடுவதில்லை. நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, பிரதான, பகிர்மான கால்வாய் பகுதிகளில், நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, பக்கவாட்டு ஆழ்துளை கிணறு அமைத்து திருடுகின்றனர்.
கடைமடையில் வெள்ளகோவிலுக்கு தண்ணீர் வரவில்லை; குண்டடம், பொங்கலுார், உடுமலை பகுதி விவசாயிகள் கூடுதலாக தண்ணீர் எடுத்துக்கொள்கின்றனர் என்று புகார் கூறி, வெள்ளகோவில் பகுதி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
பி.ஏ.பி.,ல் ஜீரோ கிலோ மீட்டரில் உள்ள கடைமடை பகுதிக்கே போதுமான தண்ணீர் கிடைப்பதில்லை. நீர் நிர்வாகம் மூலமாகதான் நாங்கள் சமாளித்து வருகிறோம். தண்ணீருக்காக போராடுவது என்றால், ஜீரோ கி.மீ., முதல், கடை மடை வரையிலான அனைத்து பாசன விவசாயிகளும்தான் போராட வேண்டியதுதான்.
இவ்வாறு அவர்கள் பேசினர்.
வாய்க்கால் நேரடி ஆய்வு
கலெக்டர் உறுதிமொழி
பாசன விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்த கலெக்டர் மனீஷ் நாரணவரே, ''நுாறு நாள் வேலை திட்டத்தில் பணிகள் மேற்கொள்வதற்கு சில நெறிமுறைகள் உள்ளன. இதுகுறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்து, பி.ஏ.பி., வாய்க்கால் துார்வாரும் பணிகளை விரைந்து மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். கால்வாய்களின் நிலை குறித்து, நேரடியாக கள ஆய்வு செய்கிறேன்,'' என்றார்.
---