ADDED : பிப் 21, 2025 12:17 AM
திருப்பூர்; 'உங்களைத்தேடி உங்கள் ஊரில்' திட்டத்தில், திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ், நேற்று முன்தினம் காலை, 9:00 மணி முதல் நேற்று காலை, 9:00 மணி வரை, தாராபுரம் தாலுகாவில் தங்கினார்.
குண்டடம் ஒன்றியம், ஜோதியம்பட்டி ஊராட்சியில் நடைபெற்றுவரும் பி.ஏ.பி., வாய்க்கால் துார்வாரும் பணியை பார்வையிட்ட கலெக்டர், குண்டடம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்களுடன் கலந்துரையாடினார். மாணவர்களுடன் தரையில் அமர்ந்து உணவு உட்கொண்டார்.
குண்டடம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் வளர்ச்சிப்பணிகளை ஆய்வு செய்தார். நேற்று காலை, தாராபுரம் ஒன்றியம் கண்ணாங்கோவில் ஊராட்சி, உ.ஆலாம்பாளையம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் நடைபெற்ற இலவச கால்நடை சிகிச்சை முகாமில் பங்கேற்ற கலெக்டர், மாடுகளுக்கான ஊட்டச்சத்து பொருட்களை, கால்நடை வளர்ப்பாளர்களிடம் வழங்கினார். உ.ஆலாம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், மாணவர்களுடன் உணவு உட்கொண்டுவிட்டு, திருப்பூர் திரும்பினார்.