/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நீரோட்டத்தை பாதிக்கும் ஆகாயத்தாமரை
/
நீரோட்டத்தை பாதிக்கும் ஆகாயத்தாமரை
ADDED : ஜூலை 04, 2025 10:16 PM
உடுமலை; உடுமலை அருகே அமராவதி ஆற்றின் கரையில், மக்கள் அதிகம் பயன்படுத்தும் படித்துறைகள், தடுப்பணைகள் மற்றும் ஆற்றின் கரையோரம் மற்றும் மேடான பகுதிகளில், ஆகாயத்தாமரையின் பரவல் சமீபகாலமாக அதிகரித்துள்ளது.
குறிப்பாக, கல்லாபுரம், ருத்ராபாளையம், கொழுமம், மடத்துக்குளம், கடத்துார் உள்ளிட்ட இடங்களில், நாள்தோறும் நுாற்றுக்கணக்கான மக்கள், ஆற்றங்கரைக்கு சென்று வருகின்றனர்.
இப்போது, அப்பகுதி முழுவதும், ஆகாயத்தாமரை மட்டுமல்லாது, கரைகளில் பல்வேறு செடி, கொடிகள் முளைத்து, புதர் மண்டி காணப்படுகிறது.
இதனால், ஆற்றின் இயல்பான நீரோட்டம் தடைபடுகிறது; மழைக்காலங்களில், வெள்ளப்பெருக்கு இருக்கும் போது நீரோட்டம் திசைமாறி, பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. கடத்துார், மடத்துக்குளம் உள்ளிட்ட, அமராவதி ஆற்றின் வழித்தட பகுதிகளில், முதலைகள் குறித்து பல்வேறு தகவல்கள் மக்களிடையே பரவுகிறது.
நீர் தேங்கும் இடங்களிலும், ஆகாயத்தாமரை செடிகளை, பொதுப்பணித்துறையினர் மற்றும் அருகிலுள்ள உள்ளாட்சி நிர்வாகங்கள் வாயிலாக அகற்ற வேண்டும்.
பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும், ஆகாயத்தாமரை செடிகள் ஆற்று நீரில் பரவுவது ஆபத்தானது என இயற்கை ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இச்செடிகளை அகற்றினால், ஆற்றில் நீரோட்டம் தடைபடாமல் செல்லும். நன்னீர் முதலைகளும், இயல்பான வாழ்விடங்களுக்கு இடம் பெயர்ந்து விடும். மக்களும், விவசாயிகளும் அச்சமின்றி, ஆற்றங்கரையை பயன்படுத்த முடியும். ஆற்று நீர் மாசுபடுவதும் தவிர்க்கப்படும்.
எனவே, இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து, முக்கிய நீராதாரமான அமராவதி ஆற்றை காப்பாற்ற வேண்டும்.