ADDED : மார் 01, 2026 06:45 AM

தி ருப்பூர் மாவட்ட எல்லைக்குள் சாமளாபுரம் அருகே, நொய்யல் ஆற்றின் நிலை படுமோசமாக இருக்கிறது. துர்நாற்றம் வீசும் கழிவுகளை ஆற்றோரம் கொட்டுவதால், அசுத்தமான பகுதியாக காட்சியளிக்கிறது.
ஆற்றை கடந்துசெல்பவர்கள், ஒரு நிமிடமாவது மூக்கை பிடித்துக்கொண்டு செல்ல வேண்டியுள்ளது. இதேநிலைதான், மங்கலம் பகுதியிலும் நிலவுகிறது; இறைச்சிக்கழிவுகளை ஆற்றங்கரையில் கொட்டுவதால், மங்கலம் நொய்யல் பாலத்தை நினைத்தாலே துர்நாற்றம் தான் ஞாபகத்துக்கு வருகிறது. ஊராட்சி சார்பில், சேகரிக்கப்படும் திடக்கழிவுகளும், ஆற்றோரம் கொட்டப்படுகிறது.
சாமளாபுரம் துவங்கி, மங்கலம் பகுதி வரை, நொய்யல் ஆற்றின் பல்வேறு இடங்களை, ஆகாயத்தாமரை ஆக்கிரமித்துள்ளது. அதாவது, ஆறு என்பதற்கான அடையாளமே தெரியாத அளவுக்கு முழுவதுமாக ஆகாயத்தாமரை ஆக்கிரமித்து காணப்படுகிறது.
பொதுமக்கள் கூறுகையில், 'மங்கலம் பகுதியில் இயங்கும் இறைச்சிக்கடைகள், கழிவுகளை ஆற்றோரமாக கொட்டுவதால் சுகாதாரசீர்கேடு ஏற்படுகிறது.
சரியான மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும். கோடைக்காலத்தில், தண்ணீர் குறையும் போது, ஆற்றை துார்வாரி, ஆகாயத்தாமரையை அகற்ற வேண்டும். பொதுப்பணித்துறை என்றைக்கும் இதை செய்ய வாய்ப்பில்லை. விவசாயிகள், தன்னார்வ அமைப்புகள், ரோட்டரி அமைப்புகள் இணைந்து, இத்தகைய சேவை பணியை செய்ய முன்வர வேண்டும்,' என்றனர்.

