ADDED : ஜன 12, 2025 11:44 PM
திருப்பூர் மாநகராட்சியுடன் இணைந்து தெற்கு ரோட்டரி சங்கம், ஜீவநதி நொய்யல் சங்கம், 'நிட்மா' ஆகியன சார்பில் நாளை (14ம் தேதி) 'திருப்பூர் பொங்கல் திருவிழா' நொய்யல் தென்புறக்கரையில் நடக்கிறது. மொத்தம் 501 பானைகளில் பொங்கலிடப்படும்.
விகடகவி குழுவினரின் மங்கள இசையுடன் விழா துவங்குகிறது. காலை 6:00 மணிக்கு பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி துவங்கியுடன், கலை நிகழ்ச்சிகள் துவங்கவுள்ளது. சலங்கையாட்டம், வள்ளி கும்மியாட்டம். பெருஞ்சலங்கையாட்டம், பவளக்கொடி கும்மியாட்டம் மற்றும் காவடியாட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும்.
கமல விநாயகர் மற்றும் சித்தி விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறவுள்ளது. மாலை 4:30 மணிக்கு விகடகவி குழுவின் கிராமியக் கலை நிகழ்ச்சிகள், விகாஸ் வித்யாலயா, தெற்கு ரோட்டரி மற்றும் பாலபவன் பள்ளி மாணவர்கள் கலை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.அதன் பின் நடைபெற உள்ள விழாவில் கலெக்டர், அமைச்சர்கள் மற்றும் அமைப்பினர் கலந்து கொள்கின்றனர்.
நொய்யல் பண்பாட்டு அமைப்பு, திருப்பூர் மாநக ராட்சியுடன் இணைந்து நடத்தும் பொங்கல் திருவிழா 15ம் தேதி, யுனிவர்சல் தியேட்டர் ரோடு நொய்யல் கரையில் நடக்கிறது. அன்று மாலை 4:00 மணிக்கு பொங்கல் வைப்பு நிகழ்ச்சியும், தொடர்ந்து பரதநாட்டியம், பறை இசை மற்றும் இன்னிசைக் கச்சேரி நடக்கிறது.
அடுத்த நாள் 16ம் தேதி மாலை 4:00 மணிக்கு சிலம்பாட்டம், காவடியாட்டம், பறையிசை, நாட்டுப் புறக்கலை நிகழ்ச்சி, நாடகம், நையாண்டி மற்றும் நடனம் ஆகிய நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளது.