/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில் நெரிசல் இருக்காது!: நெட்பேங்கிங் வசதிக்கு பணிகள் தீவிரம்
/
மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில் நெரிசல் இருக்காது!: நெட்பேங்கிங் வசதிக்கு பணிகள் தீவிரம்
மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில் நெரிசல் இருக்காது!: நெட்பேங்கிங் வசதிக்கு பணிகள் தீவிரம்
மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில் நெரிசல் இருக்காது!: நெட்பேங்கிங் வசதிக்கு பணிகள் தீவிரம்
ADDED : ஜன 16, 2026 05:57 AM

உடுமலை: மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில் கூட்ட நெரிசலை தவிர்க்கவும், பரிவர்த்தனைகளை எளிதாக்கவும், 'நெட்பேங்கிங்' உள்ளிட்ட வசதிகளை கூட்டுறவு துறையினர் ஏற்படுத்தி வருகின்றனர். விரைவில் இப்பணிகளை நிறைவு செய்து பிரச்னைக்கு தீர்வு காண விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
தமிழக அரசு, தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், பயிர்க்கடன் கேட்டு விண்ணப்பிக்கும் போது, கடன் தொகையானது சம்பந்தப்பட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகள் வாயிலாகவே வழங்கப்படுகிறது.
இதே போல், கிராமப்புற மகளிர் சுய உதவிக்குழுக்களின் தொழில் கடன் பரிவர்த்தனைகள், நகைக்கடன் வழங்குதல் என மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளை கிராமப்புற விவசாயிகள் உட்பட அனைத்து தரப்பினரும் அதிகளவு பயன்படுத்துகின்றனர்.
இந்நிலையில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் பெதப்பம்பட்டி உள்ளிட்ட கிராமப்புற கிளைகளில், அதிக நெரிசல் உள்ளிட்ட காரணங்களால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
ஒரே நேரத்தில் பயிர்க்கடன், தொழில் கடன் மற்றும் நகைக்கடன் பரிவர்த்தனைகளுக்கு மக்கள் செல்லும் போது, போதிய வசதி இல்லாதததால், மத்திய கூட்டுறவு வங்கி கிளை அலுவலர்கள், அவர்களை திருப்பி அனுப்புகின்றனர்.
இதே போல், பெரும்பாலான மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளிலும் நெரிசல் நிலவுகிறது. இதை தவிர்க்க கூட்டுறவுத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இது குறித்து கூட்டுறவு துறையினர் கூறியதாவது:
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில் இணைக்கப்பட்ட, தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில், பயிர்க்கடன் பெறும் அனைத்து விவசாயிகளுக்கும் தேவையான நேரங்களில், வங்கி கிளைக்கு நேரில் வராமல் தொகை பெறும் வகையில், கே.சி.சி., ரூபே கார்டு (கடன் அட்டை) வழங்கப்படுகிறது. அனைத்து வங்கிகளிலும் மைக்ரோ ஏ.டி.எம்., வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அந்தந்த பகுதியிலுள்ள விவசாயிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களை வங்கியின் வணிக தொடர்பாளர்களாக செயல்பட மாதிரி சங்கங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
பயிர்க்கடன் பெறும் விவசாயிகள் மத்திய வங்கி கிளைக்கு நேரடியாக வந்து வரவு, செலவு செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.விவசாயிகள் தங்கள் கணக்கில் உள்ள தொகையை 'நிப்ட்' மற்றும் ஆர்.டி.ஜி.எஸ்., வாயிலாக இதர கணக்குகளுக்கு, மாற்றம் செய்து கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
வங்கியின் கிளைகளில், இதர சேவைகளை நேரடியாக பெறும் அனைத்து வாடிக்கையாளர்களும் அவர்களின் வங்கி சேமிப்பு கணக்குகளுக்கு, 'ரூபே டெபிட் கார்டு' வழங்கப்பட்டுள்ளது.
அதன் வாயிலாக, அனைத்து வரவு செலவுகளுக்கும் வங்கி கிளைக்கு வராமல் மொபைல் பேங்கிங், 'யு.பி.ஐ.,' வாயிலாக வரவு செலவு செய்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. நெட்பேங்கிங் பணிகள் நிறைவு பெறும் போது, நெரிசல் தவிக்கப்படும், பரிவர்த்தனைகள் எளிதாகும்.
இவ்வாறு, தெரிவித்தனர்.
இப்பணிகளை விரைவாக முடித்து, தற்காலிக கட்டடங்களில் இயங்கும் வங்கி கிளைகளுக்கு நிரந்தர கட்டடம் கட்ட வேண்டும். அனைத்து சேவைக்கான பணிகளையும் விரைவாக முடிக்கவும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

