/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'பட்டம்' இதழ் படித்தனர்; பல்திறன் பெற்றனர்
/
'பட்டம்' இதழ் படித்தனர்; பல்திறன் பெற்றனர்
ADDED : டிச 14, 2025 07:41 AM

திருப்பூர்: அவிநாசி, பழனியப்பா இன்டர்நேஷனல் சீனியர் செகண்டரி பள்ளியில் நேற்று 'தினமலர்' மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ்; எஸ்.என்.எஸ். கல்விக்குழுமம் இணைந்து நடத்திய 'பதில் சொல் - பரிசை வெல்' வினாடி - வினா போட்டியில், மாணவ, மாணவியர் கலந்துகொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி அரையிறுதிக்கு தேர்வாகினர்.
பாடங்கள் சார்ந்த கேள்வி மட்டுமல்லாமல் அதை தாண்டி, அறிவாற்றலை வளர்க்கும் விதம் படைப்பாற்றல், சிந்தனையாற்றலை மேம்படுத்தும் விதமாக 'தினமலர்' நாளிதழின் 'பட்டம்' இதழ் 'வினாடி - வினா' போட்டி நடத்தப்படுகிறது.
கல்வியில் நவீன தொழில்நுட்பம் வந்தாலும், 'பட்டம்'இதழ் வாசித்து, அதில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிப்பதால் பெற்ற அறிவாற்றல் மனதில் நிலைத்து நிற்கும் வகையில் இருப்பதாக மாணவர்கள் கூறுகின்றனர்.
பள்ளி அளவிலான போட்டியில் வெற்றி பெறும் அணிகள், அரையிறுதிக்கு தகுதி பெற்று, அதிலிருந்து தேர்வாகும் எட்டு அணியினர், இறுதிப்போட்டியில் பங்கேற்பர்.
அதில் வெற்றி பெறும் அணிகளுக்கு, கிப்ட் ஸ்பான்சர்களான சத்யா ஏஜென்சீஸ், ஸ்போர்ட்ஸ் லேண்ட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் சிறப்பு பரிசு வழங்கப்படும்.
அவ்வகையில், அவிநாசியிலுள்ள பழனியப்பா இன்டர்நேஷனல் சீனியர் செகண்டரி பள்ளியில் நடந்த தகுதிச்சுற்றில், 238 மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
மதிப்பெண் அடிப்படையில் முதல் 16 மாணவ, மாணவியர் எட்டு அணிகளாக பிரிந்து, பள்ளி அளவிலான இறுதிப்போட்டியில் கலந்து கொண்டனர்.
பல்வேறு சுற்றுகளாக நடந்த போட்டியில் 'ஏ' அணி வெற்றி பெற்றது. இந்த அணியை சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவியர் ஸ்ரீஷா மற்றும் உபாசனா, அரையிறுதிக்கு தகுதி பெற்று சிறப்பு பரிசை வென்றனர்.
இருவருக்கும், போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும், பள்ளி முதல்வர் வித்யாசங்கர், பதக்கமும் சான்றிதழும் வழங்கி பாராட்டினார்.
இந்த வினாடி வினா போட்டியில், கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட பள்ளிகளின் மாணவ, மாணவியர் இப்போட்டியில் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

