வாக்கு எண்ணும் மையத்துக்கு மூன்று அடுக்கு பாதுகாப்பு
வாக்கு எண்ணும் மையத்துக்கு மூன்று அடுக்கு பாதுகாப்பு
ADDED : ஏப் 24, 2026 06:27 PM
உடுமலை: திருப்பூர் மாவட்டத்தில், உடுமலை, மடத்துக்குளம் சட்டசபை தொகுதி உட்பட, 8 சட்டசபை தொகுதிகளிலும் நேற்றுமுன்தினம் வாக்குப்பதிவு அமைதியாக முடிந்ததைத்தொடர்ந்து, வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் எண்ணிக்கை மையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டன.
மாலை 6:00 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்ததும், வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டுக் கருவிகள் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் 'சீல்' வைக்கப்பட்டன.
'விவிபேட்' சீட்டுகள் மற்றும் தேர்தல் ஆவணங்களும் பாதுகாப்பாகப் பெட்டிகளில் அடுக்கப்பட்டன.
மண்டல அலுவலர்கள் வாயிலாக பெறப்பட்ட இந்த இயந்திரங்கள், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கலைக்கல்லுாரிக்குக் கொண்டு செல்லப்பட்டன. விடிய விடிய இந்த இடமாற்றப்பணி விறுவிறுப்பாக நடைபெற்றது.
மூன்றடுக்கு பாதுகாப்பு வாக்கு எண்ணிக்கை மையமான எல்.ஆர்.ஜி. கல்லுாரியில், 8 தொகுதிகளுக்கும் தனித்தனியாகப் பாதுகாப்பு அறைகள் (ஸ்ட்ராங் ரூம்) தயார் செய்யப்பட்டிருந்தன. அங்கு வந்த இயந்திரங்களை அதிகாரிகள் சரிபார்த்து, வரிசைப்படி அடுக்கி வைத்தனர்.
அனைத்து இயந்திரங்களும் வைக்கப்பட்ட பின், பாதுகாப்பு அறைகள் சீல் வைக்கப்பட்டன. வரும் மே மாதம் 4-ம் தேதி, வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில் இந்த அறைகள் திறக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
அதுவரை அந்தப் பகுதி முழுவதும், சிசிடிவி கேமராக்கள் மற்றும் போலீசாரின் தீவிர கண்காணிப்பில் இருக்கும், என அதிகாரிகள் தெரிவித்தனர்.
