/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஏற்றுமதியாளருக்கு கைகொடுத்த 'வனத்துக்குள் திருப்பூர்'
/
ஏற்றுமதியாளருக்கு கைகொடுத்த 'வனத்துக்குள் திருப்பூர்'
ஏற்றுமதியாளருக்கு கைகொடுத்த 'வனத்துக்குள் திருப்பூர்'
ஏற்றுமதியாளருக்கு கைகொடுத்த 'வனத்துக்குள் திருப்பூர்'
ADDED : டிச 29, 2024 07:49 AM
'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தால், சர்வதேச அளவில், பசுமை வளர்க்கும் ஏற்றுமதியாளர் என்ற பெருமை திருப்பூருக்கு கிடைத்துள்ளது.
'வெற்றி' அறக்கட்டளையின், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம், மாவட்டத்தின் பசுமை பரப்பை விரிவாக்கும் முயற்சியாக துவங்கப்பட்டது. இளம் பசுமை அமைப்புகள் கரம்கோர்த்து, கூட்டு இயக்கமாக மாற்றியுள்ளனர்.
'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம், 2015ல் துவங்கி, 2024ம் ஆண்டு வரை, 10 கட்டமாக, மரக்கன்றுகள் நட்டு வளர்க்கப்படுகிறது; இதுவரை, 21 லட்சத்துக்கும் அதிகமான மரக்கன்றுகள் நட்டு, 20 லட்சம் மரங்கள் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளன.
ஏக்கருக்கு, 120 மரங்கள் என்ற வகையில், மாவட்ட எல்லையில், 17 ஆயிரம் ஏக்கரில், மரங்கள் வளர்ந்த காடாக மாற்றியுள்ளனர்.
ஓரிடத்தில், 50 வகையான, 1,000 மரக்கன்றுகளை நட்டு வளர்த்த போது, எதிர்பராத வகையில், 250 மரம், செடி, கொடிகள் அங்கு உருவாகியுள்ளன.
பூச்சிகள், புழுக்கள், பறவைகள், பாம்பு என, பல்லுயிர் சுழற்சி மண்டலமாக பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளது. பசுமைக்கு ஓய்வில்லை என்பது போல், 10 வது திட்டத்தில், மூன்று லட்சத்துக்கும் அதிகமான மரக்கன்றுகளை நட்டு முடித்த பிறகும், 11வது திட்டத்தில், இரண்டு லட்சம் மரக்கன்றுகள் வளர்க்க இலக்கு நிர்ணயித்துள்ளனர்.
'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில் இல்லாத அளவுக்கு, 2024ல், மூன்று லட்சம் மரக்கன்றுகள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு சாதனை நிகழ்த்தப்பட்டிருக்கிறது.
2025ம் ஆண்டிலும் இலக்கை தாண்டிய வெற்றிப்பயணம் தொடர உள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக, பாழ்பட்டிருந்த ஒரத்துப்பாளையம் அணைக்கு புத்துயிர் அளிக்கும் வகையில், துார்வாரி சீரமைத்து, 100 ஏக்கர் வாரியாக, மரக்கன்றுகளை நட்டு வளர்ந்து, பசுமை சோலையாக மாற்றும் வெற்றி பயணமும், இந்தாண்டில் துவங்கியது, இத்திட்டத்துக்கு மற்றொரு மைல்கல்.
மாபெரும் மரக்கன்று இயக்கத்தை, மக்களின் பாசமிகு பசுமை இயக்கமாக வெற்றிகரமாக நிறைவேற்றியது, திருப்பூர் ஏற்றுமதியாளர்களுக்கான சாதனையாகவும் மாறியுள்ளது. 'டாலர் சிட்டி' ஏற்றுமதியாளர்கள், 'பசுமை வளர்க்கும் திருப்பூர்' என்று பெருமிதம் அடைந்துள்ளனர்.
பசுமைக்கு தலைவணங்கும் உலக நாடுகள், மரம் வளர்ப்பில் சிறந்த திருப்பூர் என்று பாராட்டும் நிலையை திருப்பூர் பெற்றுள்ளது, இந்தாண்டின் சிறப்பம்சங்களுள் ஒன்று.