/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வகுப்பறையில் செயல்படும் கல்வித்துறை அலுவலகங்கள்
/
வகுப்பறையில் செயல்படும் கல்வித்துறை அலுவலகங்கள்
ADDED : ஆக 01, 2011 10:17 PM
திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் கல்வித்துறை சார்ந்த அனைத்து அலுவலகங்களும், வகுப்பறையில் செயல்பட்டு வருவதால், மாணவர்களுக்கு பெரும் இடையூறு ஏற்பட்டு வருகிறது.
திருப்பூர் மாவட்டமாக உருவான பின், கடந்த 2009ம் ஆண்டு முதன்மை கல்வி அலுவலகம் கொண்டு வரப்பட்டது. முதன்மை கல்வி அலுவலகம், கே.எஸ்.சி., அரசு ஆண்கள் மேல்நிலைப்பள் ளியில் செயல்படுகிறது. வகுப்பறைகளாக பயன்படுத்திய கட்டடம், அலுவலக பணிக்காக மாற்றப்பட்டது. முதன்மை கல்வி அலுவலர் அறையும், ஒரு வகுப்பறையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அப்பள்ளியில் அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்ட அலுவலகம், அனைவருக்கும் கல்வித்திட்ட அலுவலகமும் செயல்பட்டு வருகின் றன. மாணவர்களுக்கு பயன்பட வேண்டிய 15 வகுப்பறைகள் மற்றும் கழிப்பறைகள், அலுவலக பயன்பாட்டுக்கு உபயோகமாகிறது. அனைத்து கல்வி அலுவலகங்களும், அப்பள்ளியில் செயல்படுவதால் பள்ளியின் நுழைவாயிலை எந்நேரமும் திறந்து வைக்க வேண்டிய கட்டாயம் நேரிடுகிறது. இது, அப்பள்ளி மாணவர்கள் விருப்பப்படும் நேரங்களில் வெளியே செல்வதற்கு வாய்ப்பாக அமைகிறது. கடந்தாண்டு உருவாக்கப்பட்ட மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம், திருப்பூர் மேட்டுப்பாளையம் நடுநிலைப்பள்ளியில் செயல்படுகிறது. இட வசதி குறையான, சிறிய கட்டடத்தில் தொடக்க கல்வி அலுவலகம் அமைந்துள்ளது. அதேபோல், மாவட்ட கல்வி அலுவலகம் வாவிபாளையம் தொடக்க பள்ளியிலும், தெற்கு உதவித்தொடக்க கல்வி அலுவலகம், அரண்மனைப்புதூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியிலும் செயல்படுகின்றன. இந்த அலுவலகங்களில் கம்ப்யூட்டர், பேன், விளக்கு உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் ஏற்படும் மின் கட்டணம் உள்ளிட்ட பராமரிப்பு செலவுகளை, அரசு பள்ளிகளே செலவழிக்க வேண்டியுள்ளது. கல்வி அலுவலகங்கள் அனைத்தும் இட வசதியின்றி பள்ளி கட்டடங்களில் செயல்படுவதால், அதை சார்ந்த பள்ளியினர் மற்றும் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். கோவை மற்றும் பிற மாவட்டங்களை போல், பொதுமக்கள், ஆசிரியர்கள் என அனைத்து தரப்பினரும் வந்து செல்ல வசதியாக, கல்வித்துறை சார்ந்த அலுவலகங்கள் ஓரிடத்தில் தனியாக செயல்பட, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.