/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உணவுப்பொருள் நஞ்சாக மாற வியாபாரிகள் தான் காரணம்: 'நாம்' இயக்க தலைவர் காட்டம்
/
உணவுப்பொருள் நஞ்சாக மாற வியாபாரிகள் தான் காரணம்: 'நாம்' இயக்க தலைவர் காட்டம்
உணவுப்பொருள் நஞ்சாக மாற வியாபாரிகள் தான் காரணம்: 'நாம்' இயக்க தலைவர் காட்டம்
உணவுப்பொருள் நஞ்சாக மாற வியாபாரிகள் தான் காரணம்: 'நாம்' இயக்க தலைவர் காட்டம்
ADDED : டிச 12, 2025 07:43 AM
திருப்பூர்: ''உணவுப்பொருட்கள் நஞ்சாக மாறுவதற்கு, வீரிய விதைகள் அதிகளவில் இறக்குமதி செய்யப்படுவதும், உணவுப் பொருளில் கலப்படம் செய்யும் வியாபாரிகளும் தான் காரணம்; மாறாக, விவசாயிகள் இல்லை,'' என, தேசிய விவசாயிகள் விழிப்புணர்வு இயக்க (நாம்) மாநில தலைவர் பிரபுராஜா கூறினார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
'விவசாயப் பொருட்களில் நச்சுத்தன்மை ஏற்படுவதற்கு விவசாயிகளே காரணம்; வியாபாரிகள் இல்லை' என, வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.
மாட்டுசாணம், தொழு உரம் போன்ற இயற்கை உரங்களை பயன்படுத்தியே, விவசாயிகள், விளைப் பொருட்களை விளைவித்து வந்தனர்; இதனால், நோயின்றி மனிதர்கள் ஆரோக்கியமாக வாழ்ந்தனர். வீரிய ரக விதைகள், ரசாயன உரம், பூச்சிக் கொல்லி ஆகியவை பயன்பாட்டுக்கு வந்தன; நாட்டை பல காலம் ஆண்ட காங். அரசு தான் அதிகளவில் அவற்றை இறக்குமதி செய்தது.
மாநில அரசுகளும் இதனை பின்பற்றின; வீரிய ரக விதைகளுக்கு தான் அதிகளவில் பூச்சிக்கொல்லி தேவைப்படுகிறது; உணவுப்பொருள் நஞ்சாக மாறுவதற்கு இதுதான் முதல் காரணம்.
விளை பொருட்களில் கலப்படம் செய்து, சந்தைப்படுத்துவது அடுத்த காரணம். உதாரணமாக குருமிளகில், பப்பாளி விதை கலப்படம் செய்கின்றனர். மிளகாய் பொடியில் செங்கல் துாள், மஞ்சள் துாளில் கேசரி பவுடர், டீத்துாளில் மரத்துாள், வெல்லத்தில் அஸ்கா, தேனில் சர்க்கரை பாவு கலப்படம் செய்கின்றனர். இதுபோன்று கலப்படம் செய்வது, பேராசை பிடித்த சில வியாபாரிகள் தானே தவிர, விவசாயிகள் அல்ல.
மத்திய அரசு மரபணு விதை இறக்குமதியை முற்றிலும் தடை செய்ய வேண்டும்; அப்போது தான், இயற்கை வேளாண்மை செழிக்கும்; விளைபொருட்கள் ஆரோக்கியம் நிறைந்ததாக மாறும். இவ்வாறு, அவர் கூறினார்.

