ADDED : செப் 15, 2025 11:50 PM

அவிநாசி; அவிநாசியில் பிரதான ரோட்டில், 50 ஆண்டுகளாக நிழல் கொடுத்து வந்த, இரண்டு மரங்களை வெட்டி சாய்த்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுற்றுச்சூழலை பாதுகாக்க மரக்கன்றுகளை நட்டு வளர்கக அரசு மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது. பசுமை ஆர்வலர்களும் பல இடங்களில் மரங்களை நட்டு வளர்த்து வருகின்றனர். மற்றொரு பக்கம், பல ஆண்டுகளாக மக்களுக்கு நிழல் கொடுத்து வந்த மரங்களை எவ்வித அனுமதியில்லாமல் வெட்டி சாய்த்து வருகின்றனர். இது தொடர்கதையாக இருந்து வருகிறது.
அவ்வகையில், அவிநாசி நகராட்சிக்கு உட்பட்ட, 12 வது வார்டு, அண்ணா வீதியில் பிரதான ரோட்டில் இருந்த வேப்ப மரம் உட்பட, இரண்டு மரங்களை நேற்று வெட்டி சாய்த்தனர். 50 ஆண்டுகளான பழமையான மரம், மக்களுக்கு நிழல் கொடுத்து வந்தது. எவ்வித இடையூறு இல்லாமல், மக்களுக்கு பயன் தந்த மரத்தை வெட்டி சாய்த்தனர்.
இது குறித்து, அவிநாசியில் இயங்கி வரும், நல்லது நண்பர்கள் அறக்கட்டளை நிறுவனர் ரவிக்குமார் கூறியதாவது:
சமீப காலமாக அவிநாசி நகராட்சி பகுதியில், நன்கு வளர்ந்த, நிழல் கொடுத்து வரும் மரங்கள் வெட்டப்படுவது தொடர் கதையாகி உள்ளது. ஒரு மரம் நன்றாக வளர எத்தனை ஆண்டுகள் ஆகிறது. ஆனால், ஒரு நிமிடத்தில் மரங்களை வெட்டி சாய்க்கின்றனர். கடந்த வாரம், நகராட்சி தலைவர் தனலட்சுமியின் வார்டான வ.உ.சி., காலனியில், நன்றாக வளர்ந்திருந்த வேப்ப மரங்களும், நேற்று அண்ணா வீதியில், 2 மரங்களும் வெட்டி சாய்க்கப்பட்டன.
அவிநாசியில் மரங்களை வெட்டுவதை, வார்டு கவுன்சிலர் முதல் அதிகாரிகள் வரை, யாரும் கண்டுகொள்ளவில்லை. தொடரும் மரக்கொலையை நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல், மவுனமாக இருப்பது அதிர்ச்சியாக உள்ளது. மரங்களை வெட்ட வருவாய்த்துறையினரிடம் அனுமதி வாங்கவில்லை. இவர்கள் இஷ்டத்துக்கு மரங்களை வெட்டி கொண்டே உள்ளனர். எனவே, இது குறித்து, அவிநாசி போலீஸ் மற்றும் தாசில்தாரிடம் நாளை (இன்று) புகார் மனு கொடுக்க உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.