ADDED : அக் 07, 2024 01:08 AM

சிறு, குறு விவசாயிகள் பயன்படுத்தும் வகையில், நீர் நிலைகளில் வண்டல் மண் அள்ள திருப்பூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு குளம் - குட்டைகளில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பல்லடம் வட்டாரத்திலுள்ள, 30க்கும் மேற்பட்ட நீர்நிலைகளிலும் மண் அள்ளும் பணி நடந்து வருகிறது. வண்டல் மண், களிமண் இல்லாத குளம், குட்டைகளிலும், அனுமதி வழங்கப்பட்டதுடன், சட்ட விரோதமாக கிராவல் மண் வெட்டி எடுக்கப்பட்டு வருவதாக, தொடர்ச்சியான புகார்கள் எழுந்து வருகின்றன.
குளம், குட்டையில் வண்டல் மண், களிமண் உள்ளதா; அவ்வாறு இருந்தால், அதில் எவ்வளவு யூனிட் மண் எடுக்கலாம் என்பது குறித்து, முன்கூட்டியே ஆய்வு செய்து, அதன் அடிப்படையில், மண் அள்ள அனுமதி வழங்கப்படுகிறது. ஊரக வளர்ச்சி, வருவாய்த்துறை, கனிம வளம், ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை உள்ளிட்டவை இதற்கு பொறுப்பேற்கின்றன.
ஆனால், இத்தகைய ஆய்வு பெயரளவுக்கு நடக்கின்றன. மண் அள்ளும் பணியை கண்காணிக்க அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால், எங்குமே அதிகாரிகள் பணியை கண்காணித்ததாக தெரியவில்லை. நிர்ணயிக்கப்பட்ட அளவை காட்டிலும் பல மடங்கு கிராவல் மண் எடுக்கப்பட்டதால், பல இடங்களில் நிலத்தடி நீரும் கூட மாயமாகியுள்ளது. குளம் - குட்டைகள் அனைத்தும் குவாரிகள் போன்று ஆழமாக்கப்பட்டுள்ளன. இதை கண்காணித்து தடுக்க வேண்டிய அதிகாரிகளும் மவுனம் சாதிக்கின்றனர்.
