ADDED : ஏப் 13, 2026 10:13 PM

திருப்பூர்:திருப்பூர் தெற்கு தொகுதியில் உள்ள 289 வாக்குச் சாவடிகளுக்கு, குலுக்கல் முறையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி நடைபெற்றது.
இத்தொகுதியில் 24 வேட்பாளர்கள் போட்டியிடுவதால், நோட்டாவுடன் சேர்த்து மொத்தம் 25 இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும். ஒரு இயந்திரத்தில் 16 இடங்கள் மட்டுமே இருக்கும் என்பதால், ஒவ்வொரு பூத்திலும் தலா இரண்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இதற்காக 20 சதவீத கூடுதல் கையிருப்புடன் சேர்த்து மொத்தம் 692 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 346 கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் 375 விவிபேட் கருவிகள் தயார் நிலையில் உள்ளன.
தேர்தல் பொது பார்வையாளர் தர்மேந்திர சிங் தலைமையில், மாநகராட்சி மைய அலுவலகத்தில் இப்பணி நடைபெற்றது. தேர்தல் நடத்தும் அலுவலர் அமித், உதவி அலுவலர் சுந்தரராஜன் முன்னிலை வகித்தனர். 'இ.எம்.எஸ்' இணையதளம் வாயிலாக மூன்று முறை குலுக்கல் முறையில் இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதன் விவரங்கள் வேட்பாளர்களிடம் வழங்கப்பட்டன.
வாக்குப்பதிவின் போது ஏதேனும் இயந்திரம் பழுதானால், கையிருப்பில் உள்ள மாற்று இயந்திரங்கள் வழங்கப்படும் என்றும், அதன் விவரங்கள் உடனுக்குடன் இணையதளத்தில் பதிவேற்றப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் இயந்திரங்களின் எண்களைக் கொண்டு அதன் பயன்பாட்டை உறுதி செய்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டது.
.
