ADDED : ஏப் 13, 2026 05:05 AM

திருப்பூர்: ஓட்டுச்சாவடியில் இருந்து, ஓட்டுப்பதிவு நிகழ்வுகளை 'அப்டேட்' செய்வதற்காக, ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர்கள் பயன்படுத்தும் புதிய மொபைல் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
வரும், 23ம் தேதி காலை, 7:00 மணி துவங்கி, மாலை,6:00 மணி வரை சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு நடக்கிறது.
ஓட்டுச்சாவடி தயார் செய்வது; ஓட்டுப்பதிவு துவங்கும் முன்னதாக, மாதிரி ஓட்டுப்பதிவு நடப்பது; ஓட்டுப்பதிவு துவங்கியதும், ஒவ்வொரு இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை, ஓட்டுப்பதிவு நிலவரம் போன்ற தகவல்களை பரிமாற வசதியாக, புதிய 'மொபைல் ஆப்' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
புதிய 'மொபைல் ஆப்' பயன்பாட்டை, சட்டசபை தொகுதி வாரியாகவும், ஓட்டுச்சாவடி வாரியாகவும் சோதனை முறையில் பயன்படுத்தும், மாதிரி பதிவு நிகழ்ச்சி இன்று நடக்க உள்ளது. ஓட்டுச்சாவடிகளில் உள்ள, ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் வாயிலாக, இன்று, புதிய மொபைல் ஆப் மாதிரி பயன்பாடு நடக்க உள்ளது.
திருப்பூர் வடக்கு தொகுதிக்கு உட்பட்ட தொகுதிகளில் பணியாற்றும், ஓட்டுச்சாவடி நிலை அலுவலருக்கான சூப்பர்வைசர்களுக்கு நேற்று, ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.
ஓட்டுச்சாவடிக்கு சென்றதும் தகவல் அனுப்புவது, ஓட்டுப்பதிவு நாளில் மாதிரி ஓட்டுப்பதிவு; காலை, 9:00 மணி துவங்கி, இரண்டு மணி நேர இடைவெளியிலும், ஓட்டுப்பதிவு நிறைவு பெற்றதும், ஓட்டுப்பதிவு விவரத்தை பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டது.
கடந்த தேர்தல்களில், ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர்கள், மொபைல்போனில் இருந்து, தேர்தல் நடத்தும் அலுவலருக்கு, தகவல் அளித்து வந்தனர்.
இத்தேர்தலில், 'மொபைல் ஆப்' வாயிலாக பதிவு செய்யும் நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், உடனுக்குடன் ஓட்டுப்பதிவு விவரம் தெரிய வாய்ப்புள்ளது.
