/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டதா? திருப்பூரில் பரபரப்பு: மண்டல தலைவர் மறுப்பு
/
குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டதா? திருப்பூரில் பரபரப்பு: மண்டல தலைவர் மறுப்பு
குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டதா? திருப்பூரில் பரபரப்பு: மண்டல தலைவர் மறுப்பு
குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டதா? திருப்பூரில் பரபரப்பு: மண்டல தலைவர் மறுப்பு
ADDED : மே 17, 2025 05:45 AM

திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சி மேல்நிலைத் தொட்டியில் மலம் கலந்ததாக தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதனை மறுத்த மண்டல தலைவர் மற்றும் கவுன்சிலர் தொட்டியில் நீர் நிரப்பி அதை பருகி உறுதிப்படுத்தினர்.
திருப்பூர் மாநகராட்சி, 6வது வார்டுக்கு உட்பட்ட கவுண்டநாயக்கன்பாளையம் பகுதியில், 17.5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் தொட்டி உள்ளது.
நேற்று முன்தினம் நள்ளிரவு, 11:00 மணிக்கு மேல்நிலைத் தொட்டியின் உச்சியில் சிலர் அமர்ந்திருந்தனர். அந்த கும்பல் வழக்கமாக, தொட்டி மேல் சென்று மது அருந்தி வருகின்றனர். இதையறிந்த பொதுமக்கள் சிலர், திருப்பூர் வடக்கு போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
உடனே போலீசாரும் அப்பகுதிக்கு சென்று மேல்நிலைத் தொட்டி வளாகத்திலிருந்த நபர்களை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இதற்கிடையில், குடிநீர் தொட்டியில் மலம் கலந்து விட்டதாக அப்பகுதியினர் மத்தியில் தகவல் பரவியது. இதனால், நேற்று காலை, பொதுமக்கள் திரண்டனர். இதனையறிந்து, மாநகராட்சி இரண்டாவது மண்டலக்குழு தலைவர் கோவிந்தராஜ், வார்டு கவுன்சிலர் கோபால்சாமி ஆகியோர், மேல்நிலைத் தொட்டி வளாகத்தை பார்வையிட்டனர்.
இருப்பினும் மக்கள் மத்தியில் சந்தேகம் நீடித்ததால், தொட்டியிலிருந்த குடிநீர் முழுமையாக வெளியேற்றப்பட்டு, மீண்டும் நிரப்பப்பட்டது.
அந்த குடிநீரை, மண்டல தலைவர் மற்றும் கவுன்சிலர் ஆகியோர் பொதுமக்கள் முன்னிலையில், பருகி, குடிநீரில் மலம் கலக்கவில்லை என்று உறுதிப்படுத்தினர். அதன்பின், பொதுமக்கள் கலைந்து சென்றனர். வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., விஜயகுமாரும், அப்பகுதிக்கு சென்று ஆய்வு நடத்தி, விவரம் கேட்டறிந்தார்.
அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், 'சமூக விரோதிகளின் நடமாட்டத்தை தவிர்க்க மேல்நிலைத் தொட்டி வளாகத்தில் வேலி அமைத்து பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும்; மலம் கலந்திருக்க வாய்ப்பு உள்ளதாக கருதுவதால், ஒரு மாதத்துக்கு குடிநீர் சப்ளையை நிறுத்த வேண்டும்,' என்றும் தெரிவித்தனர்.
மக்கள் மத்தியில் பேசிய மண்டல தலைவர், 'தொட்டி உள்ள இடத்தில்புதர்களை அகற்றி சுத்தம் செய்யப்படும். சுற்றுச்சுவர் அமைத்து தொட்டிக்கு பாதுகாப்பு ஏற்படுத்தப்படும்,' என உறுதி அளித்தார். இதனால், பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் நேற்று நீண்ட நேரம் பரபரப்பு நிலவியது.