/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கழிவுகளை முறையாக அகற்ற வேண்டும் ! தொழில் நிறுவனங்களுக்கு மாநகராட்சி அறிவுறுத்தல்
/
கழிவுகளை முறையாக அகற்ற வேண்டும் ! தொழில் நிறுவனங்களுக்கு மாநகராட்சி அறிவுறுத்தல்
கழிவுகளை முறையாக அகற்ற வேண்டும் ! தொழில் நிறுவனங்களுக்கு மாநகராட்சி அறிவுறுத்தல்
கழிவுகளை முறையாக அகற்ற வேண்டும் ! தொழில் நிறுவனங்களுக்கு மாநகராட்சி அறிவுறுத்தல்
ADDED : டிச 17, 2025 06:35 AM

திருப்பூர்: திடக்கழிவு மேலாண்மையில் ஆலை கழிவுகளை முறையாக ஒப்படைக்க வேண்டும். விதிகளை மீறி கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதை தவிர்த்து மாநகராட்சிக்கு ஒத்துழைக்க வேண்டும் என, ஆலோசனைக் கூட்டத்தில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் குப்பைகள் அகற்றும் பணியில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து தொழில் நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் பல்க் வேஸ்ட் உற்பத்தியாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நேற்று டவுன்ஹால் அரங்கில் நடைபெற்றது.
அமித், மாநகராட்சி கமிஷனர்:
ஆயிரம் பேருக்கு மேல் எதிர்பார்த்த கூட்டம், 100 பேர் மட்டுமே வந்துள்ளனர். அனைத்து தொழில் அமைப்புகள், தொழில் நிறுவனங்கள் ஒத்துழைப்ப தர வேண்டும். அனைத்து பகுதியிலும் மண்டல வாரியாக தொழில் நிறுவனங்களுக்கு ஆலோசனை கூட்டம் நடத்தப்படும். நகரில் 3.25 லட்சம் கட்டடங்கள் உள்ளன. ஆனால், 2,500 துாய்மைப் பணியாளர்கள் மட்டுமே உள்ளனர். கழிவுகள் தரம் பிரித்து வழங்கவேண்டும். உரிய விழிப்புணர்வும், ஒத்துழைப்பும் மிக மிக அவசியம். துாய்மைப் பணியாளர்கள் நிலையை சற்று மனிதாபிமானத்துடன் அணுக வேண்டும்.
குறிப்பிட்ட நாளுக்கு முன்னதாகவே அதிக கழிவுகள் சேர்ந்தாலும், தகவல் அளித்தால் உடனே வந்து பெறப்படும். விரைவில், இதற்கான தனி மொபைல் செயலி உருவாக்கி பயன்பாட்டுக்கு வழங்கப்படும். கழிவுகளை வெளியே வீச வேண்டாம். இரவு நேரங்களில் பரவலாசு கொண்டு சென்று வீசுவதை தவிர்க்க வேண்டும். அபராதம் விதித்தல், வாகனம் பறிமுதல்; உரிமம் ரத்து போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
மகேஸ்வரி, மாநகராட்சி துணை கமிஷனர்:
கடந்த, 2 மாதமாக மாநகராட்சி பகுதியில் குப்பை அகற்றும் பணியில் பெரும் நெருக்கடி நிலவுகிறது. ஒரு மாதமாக நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்ற அறிவுறுத்தல் வழங்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை கூட்டம் நடத்தி உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. பல்க் வேஸ்ட் உற்பத்தியாளர் குறித்த விவரங்கள் பெறப்பட்டுள்ளன. ஒரு வாரத்துக்குள் அனைவருக்கும் கழிவுகள் பெறப்படும் முறை குறித்து விவரங்களுடன் நோட்டீஸ் வழங்கப்படும். இதற்காக பிரத்யேக வாகனம் ஏற்பாடு செய்து, வழித்தடம் நிர்ணயித்து கழிவு பெறப்படும். முறையாக பிரித்து வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் அபராதம் விதித்தல் உள்ளிட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தினேஷ்குமார், மேயர்:
அனைத்து விதமான கழிவுகளையும் கையாளும் வழிமுறைகள் குறித்து, உரிய வழிகாட்டுதல்களை பின்பற்றி மேற்கொள்ள முயற்சி மேற்கொண்டுள்ளோம். நிரந்தர தீர்வு காண பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. உடனடியாக தேங்கி கிடக்கும் குப்பைகள் அகற்றுவது, தரம் பிரித்து குப்பைகள் பெறுவது ஆகியன மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக முதல் கட்டமாக, 80 ஆயிரம் குப்பை கூடைகள், குப்பையை தரம் பிரித்து பெறும் விதமாக வழங்கப்படுகிறது.
தேங்கி கிடக்கும் குப்பையில் சில விஷமிகள் தீ வைத்து மேலும் பிரச்னையை சிக்கலாக்குகின்றனர். அனைத்து இடத்திலும் கண்காணிக்க இயலாது. குப்பை என்பது நமது சமூக பொறுப்பு என்று எண்ணி செயல்பட வேண்டும். பல்வேறு வகையில் நிர்வாகத்துக்கு பலரும் அறிவுரை வழங்கி வருகின்றனர். அவற்றை ஏற்று சாத்தியமானவற்றை செயல்படுத்தலாம். எல்லாவற்றுக்கும் மக்கள் ஒத்துழைப்பு தேவை. குப்பையை தரம் பிரித்து வழங்குவது கட்டாயம். இயக்குநர் ஆலோசனையின் பேரில் வார்டுதோறும் ஒரு பொறுப்பு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார். அதிகபட்சமாக மூன்று மாத காலத்துக்குள் குப்பை இல்லாத நகரமாக திருப்பூர் மாறும் என்பது உறுதி.
குப்பைகள் கையாளும் விஷயத்தில் எந்த நடவடிக்கையையும் பின்பற்ற வேண்டும் என்று கூட வற்புறுத்தவில்லை. முறையற்ற செயல்களை செய்ய வேண்டாம் என்பது தான் எங்கள் குறைந்தபட்ச வேண்டுகோள்

