/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நீர் வரத்து கிடைக்காத தடுப்பணைகள்; சீமை கருவேல மரங்களால் சிக்கல்
/
நீர் வரத்து கிடைக்காத தடுப்பணைகள்; சீமை கருவேல மரங்களால் சிக்கல்
நீர் வரத்து கிடைக்காத தடுப்பணைகள்; சீமை கருவேல மரங்களால் சிக்கல்
நீர் வரத்து கிடைக்காத தடுப்பணைகள்; சீமை கருவேல மரங்களால் சிக்கல்
ADDED : ஜூலை 09, 2025 10:03 PM
உடுமலை; மழைக்காலத்தில் உப்பாறு ஓடையில் உள்ள தடுப்பணை மற்றும் அணைக்கு நீர் வரத்து கிடைக்கும் வகையில், சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
தாராபுரம் தாலுகா கெத்தல்ரேவ் பகுதியில் அமைந்துள்ள உப்பாறு அணை, பி.ஏ.பி., பாசன திட்டத்தில், கசிவு நீர் அணையாக, கட்டப்பட்டது.
இந்த அணை, 572 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்டதாகும். அணையிலிருந்து நேரடியாக, 6,060 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன. உப்பாறு அணைக்கு, பி.ஏ.பி., பிரதான கால்வாயில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் செல்ல கால்வாய் வசதி இல்லை.
மாறாக, அரசூர் ஷட்டரில் இருந்து, இயற்கையாக அமைந்த உப்பாறு ஓடை வழியாகவே தண்ணீர் திறக்கப்படுகிறது. ஷட்டரில் இருந்து, உப்பாறு அணை, 46 கி.மீ., தள்ளி அமைந்துள்ளது.
இந்நிலையில் தண்ணீர் செல்லும் ஓடை பராமரிக்கப்படாமல், சீமை கருவேல மரங்களால் ஆக்கிரமிக்கப்பட்டு, அவல நிலையில் உள்ளது. எனவே, வழியோரத்திலுள்ள தடுப்பணைகளுக்கு கூட போதுமான தண்ணீர் கிடைப்பதில்லை.
உப்பாறு அணைக்கு, பி.ஏ.பி., பாசன திட்டத்தில், போராடியே தண்ணீர் பெற வேண்டியுள்ளது. தென் மேற்கு பருவமழை சீசனிலும், தடுப்பணைகள் மற்றும் அணைக்கு நீர்வரத்து கிடைக்கவில்லை.
எனவே, நீர்பிடிப்பு பகுதிகளில் உள்ள ஓடைகளில், சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும்; ஆக்கிரமிப்புகளை அகற்றி துார்வாரினால், வழியோர தடுப்பணைகளும் நிரம்பும்.
அணைக்கும் நீர்வரத்து கிடைக்கும். இது குறித்து பல ஆண்டுகளாக அரசை தொடர்ந்து வலியுறுத்தியும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
உப்பாறு படுகை விவசாயிகள் கூறுகையில், 'உப்பாறு ஓடையில் சீமை கருவேல மரங்களால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. அப்பகுதியில் நிலவும் வறட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க, உப்பாறு ஓடையை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க வேண்டும்.
சீமை கருவேல மரங்களை அகற்றி தூர்வாரினால், தடுப்பணைகளுக்கு நீர் வரத்து கிடைக்கும். நிலத்தடி நீர் மட்டம் உயரும். இது குறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.