நகரிலுள்ள ரயில்வே 'கிராசிங்' பகுதிகளில்... மேம்பாலம் தேவை!போக்குவரத்து ஸ்தம்பித்து மக்கள் பாதிப்பு
நகரிலுள்ள ரயில்வே 'கிராசிங்' பகுதிகளில்... மேம்பாலம் தேவை!போக்குவரத்து ஸ்தம்பித்து மக்கள் பாதிப்பு
UPDATED : ஜூலை 01, 2026 04:26 PM
ADDED : ஜூலை 01, 2026 04:20 PM

உடுமலை: நகர போக்குவரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் ரயில்வே கேட் பகுதிகளில், மேம்பாலம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை கண்டுகொள்ளப்படாததால், பிரதான ரோடுகளில் போக்குவரத்து நெரிசல் நிரந்தரமாகி உடுமலை மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உடுமலை நகரில், திண்டுக்கல்-பாலக்காடு அகல ரயில்பாதை மூன்று இடங்களில் குறுக்கிடுகிறது. இதில், போக்குவரத்து அதிகமுள்ள தளி ரோட்டில், நீண்ட இழுபறிக்குப்பிறகு சில ஆண்டுகளுக்கு முன் மேம்பாலம் கட்டப்பட்டது.
பாலத்தின் இருபுறங்களிலும், அணுகுசாலையும் அமைக்கப்பட்டதால், ரயில்வே கேட் மூடப்பட்டு, போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. ஆனால், மற்ற இரு ரயில்வே 'கிராசிங்' பகுதிகளிலும் எவ்வித மேம்பாட்டுப்பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை.
இதனால், நகர போக்குவரத்தில் பல்வேறு பாதிப்புகள் தொடர்கதையாகியுள்ளது. குறிப்பாக, கொழுமம் ரோடு ரயில்வே கேட் பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பிப்பது தொடர்கதையாகியுள்ளது.
இந்த ரோடு, காந்திநகர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து, 18 கி.மீ., தொலைவுக்கு அமைந்துள்ளது. இந்த ரோட்டில், 25க்கும் அதிகமான கிராமங்கள் அமைந்துள்ளன; உடுமலையில் இருந்து பழநிக்கு செல்ல மாற்று வழித்தடமாகவும் உள்ளது.
வாகனங்கள் அணிவகுப்பு நகர எல்லையில் இந்த ரயில்வே கேட் அமைந்துள்ளதால், காலை, மாலை நேரங்களில் ரயில்கள் கடக்கும் போது, நுாற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இந்த அணிவகுப்பு தேசிய நெடுஞ்சாலை வரை நீள்வதால், அவ்வழியாக செல்லும் வாகனங்களும் நெரிசலில் சிக்கிக்கொள்கின்றன.
திண்டுக்கல் - பாலக்காடு அகல ரயில்பாதையில் படிப்படியாக ரயில் சேவைகள் அதிகரிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு முறை 'கேட்' மூடப்படும் போது தேசிய நெடுஞ்சாலை மற்றும் கொழுமம் ரோட்டில் போக்குவரத்து பாதிக்கிறது.
எனவே, அவ்வழியாக செல்லும் வாகனங்களை கணக்கிட்டு, மேம்பாலம் கட்ட வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.
அருகிலுள்ள உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாக தீர்மானம் நிறைவேற்றி, மதுரை ரயில்வே கோட்டத்துக்கும், நெடுஞ்சாலைத்துறைக்கும் மனு அனுப்பியும் பயன் இல்லை.
நகர போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் கொழுமம் ரயில்வே கேட்டில் மேம்பாலம் கட்டுவதற்கான ஆய்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை தீவிரமடைந்துள்ளது.
இதே போல், ராமசாமி நகர் ரயில்வே கிராசிங் பகுதியிலும், 'கேட்' மூடப்படும் போது போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது. அப்பகுதியில் இருபுறங்களிலும் தற்காலிக கடைகள் அமைப்பது நிலையை மேலும் சிக்கலாக்குகிறது.
பள்ளிக்கு செல்லும் வாகனங்கள் உட்பட அனைத்து வாகனங்களும் காலை, மாலை நேரங்களில் ரயில்வே கேட் பகுதியில் சிக்கித்திணறுகின்றன. போட்டி போட்டு வாகன ஓட்டுநர்கள் விலகி செல்லும் போது, விபத்துகளும் ஏற்படுகிறது.
இப்பிரச்னை குறித்து அனைத்து துறைகளை ஒருங்கிணைத்து, ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க திருப்பூர் மாவட்ட நிர்வாகம் உத்தரவிடட வேண்டும்.
