ADDED : ஜன 27, 2024 11:42 PM
திருப்பூர்;அவிநாசி முதல், அவிநாசிபாளையம் வரை அமைக்கப்பட்டுள்ள தேசிய நெடுஞ்சாலையில், வேலம்பட்டி அருகே, சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில், குட்டை நிலத்தை ஆக்கிரமித்து, சுங்கச்சாவடி அமைந்துள்ளதாகவும், சுங்கம் இல்லாத ரோடாக அறிவிக்க வேண்டுமெனவும், திருப்பூர் மாவட்ட விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்ல முத்து, சுங்கச்சாவடி எதிர்ப்பு குழு நிர்வாகி கிருஷ்ணசாமி உள்ளிட்டோர், கோவை வந்த மத்திய இணை அமைச்சர் முருகனை நேற்று சந்தித்து, அவிநாசிபாளையம் ரோட்டை, சுங்கம் இல்லாத ரோடாக அறிவிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.
அவரிடம் அளித்த மனுவில், 'என்.எச்.,381 ரோடு, விதிகளை பின்பற்றாமலும், அடிப்படை வசதி செய்யாமலும் அமைத்துள்ளனர். வேலம்பட்டி நீர்நிலை புறம்போக்கை ஆக்கிரமித்து, சுங்கச்சாவடி அமைத்துள்ளனர்; அதனை அகற்ற வேண்டும். இதனை, சுங்கம் இல்லாத ரோடாக அறிவிக்க வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.