/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வெறிநாய் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு எப்போது?
/
வெறிநாய் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு எப்போது?
ADDED : நவ 05, 2024 11:49 PM

பல்லடம் ; வெறி நாய்களின் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, மாவட்ட நிர்வாகம் தனி கவனம் செலுத்த வேண்டும் என, கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
அதன் மாநில ஊடகப்பிரிவு செயலாளர் ஈஸ்வரன் கூறியதாவது:
விளைபொருட்களுக்கு விலை கிடைக்காதது, பூச்சி நோய் தாக்குதல், தண்ணீர் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், விவசாயத் தொழில் பாதிக்கப்படுகிறது. இதிலிருந்து வாழ்வாதாரத்தை பாதுகாக்க, விவசாயிகள் பலர் கால்நடை விவசாயத்தில் ஈடுபடுகின்றனர். மேலும், திருப்பூர் மாவட்டத்தில், வறட்சி நிறைந்த பகுதிகளில், கால்நடை விவசாயமே பிரதானமாக உள்ளது. ஆடு மாடுகளை பராமரித்து, விவசாயிகள் வாழ்வாதாரத்தை பெருக்க முயற்சிக்கின்றனர்.
இச்சூழலில், எங்கு பார்த்தாலும் வெறி நாய்களின் வேட்டையால், ஆடு, மாடுகள், கோழிகள் இறப்பது அதிகரித்துள்ளது. அதிலும், மாவட்ட அமைச்சர் சாமிநாதனின் தொகுதிக்கு உட்பட்ட காங்கயம், முத்தூர், வெள்ளகோவில் பகுதிகளில் தான், வெறி நாய்களின் பாதிப்பு அதிகளவு உள்ளது.
சமீப நாட்களாக, வெறி நாய்களின் தாக்குதலால் எண்ணற்ற கால்நடை விவசாயிகள் பாதிப்புக்கு உள்ளாகி, நஷ்டத்தை சந்தித்துள்ளனர். இதற்கு இழப்பீடு வழங்குவது மட்டுமே தீர்வாகாது.
வெறி நாய்களை கட்டுப்படுத்த நிரந்தர தீர்வு வேண்டும். மாவட்ட நிர்வாகம், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தியும், எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. கண்ணாமூச்சி காட்டும்படியாக, பெயரளவுக்கு கு.க., செய்வதும், தடுப்பூசி போடுவதுமான செயல்கள் நடக்கின்றன. இது, நிரந்தர தீர்வு ஆகாது. மாவட்ட நிர்வாகம் இவ்விஷயத்தில் தனி கவனம் செலுத்தி, வெறி நாய்களை கட்டுப்படுத்த கூடுதல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

