/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ராஜவாய்க்கால் பள்ளத்தை மீட்பது எப்போது? துார்வாராமல் தொடர் பாதிப்பு
/
ராஜவாய்க்கால் பள்ளத்தை மீட்பது எப்போது? துார்வாராமல் தொடர் பாதிப்பு
ராஜவாய்க்கால் பள்ளத்தை மீட்பது எப்போது? துார்வாராமல் தொடர் பாதிப்பு
ராஜவாய்க்கால் பள்ளத்தை மீட்பது எப்போது? துார்வாராமல் தொடர் பாதிப்பு
ADDED : அக் 29, 2024 08:55 PM

உடுமலை: ஏழு குளங்களின் உபரி நீர் வெளியேறி, மழைக்காலங்களில், வெள்ளப்பெருக்கு ஏற்படும், ராஜவாய்க்கால் பள்ளத்தை துார்வாராததால், வழியோரத்தில், பல்வேறு பாதிப்புகள் தொடர்கதையாக உள்ளது.
உடுமலை ஏழு குள பாசன திட்ட குளங்களில் இருந்து மழைக்காலங்களில், உபரி நீர் பல்வேறு ஓடைகள் வழியாக வெளியேற்றப்படுகிறது.
இந்த ஓடைகளில், பல்வேறு குடிருப்பிலிருந்து, வெளியேறும் மழை நீரும் கலந்து வெள்ளமாக செல்லும். அவ்வாறு, உடுமலை நகரை ஒட்டி அமைந்துள்ள ராஜவாய்க்கால் பள்ளம் பல கி.மீ., துாரம் பயணித்து, உப்பாறு ஓடையுடன் இணைகிறது.
இந்த பள்ளம் பல ஆண்டுகளாக முழுமையாக துார்வாரப்படாமல், ஆக்கிரமிக்கப்பட்டு, நீர் செல்லும் பாதை குறுகலாக மாறி விட்டது. மேலும், நகரிலிருந்து வெளியேறும் கழிவு நீர் இந்த பள்ளத்தில், கலக்கிறது.
நகரில், பாதாளச்சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்ட பிறகு, கழிவு நீர் கலப்பது தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஏரிப்பாளையம் பகுதியில், கழிவு நீர் கலப்பது தொடர்கதையாகவே உள்ளது.
பல கிராமங்களின் நிலத்தடி நீர்மட்டத்துக்கு ஆதாரமாக இருந்த, இப்பள்ளம் தற்போது, கழிவு நீர் சாக்கடையாக மாறி விட்டது. பருவமழை காலங்களில், இந்த ஓடையில், வெள்ளப்பெருக்கு ஏற்படும்.
சமீபத்தில் உடுமலை நகரில் பெய்த கனமழை மற்றும் ஒட்டுக்குளத்தில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டதால், ராஜவாய்க்கால் பள்ளத்தில், தொடர்ந்து நீரோட்டம் உள்ளது.
ஆனால், முறையாக துார்வாரப்படாததால், வழியோரத்தில், பல்வேறு இடங்களில், திசை மாறி, மழை நீர் சென்று விட்டது. கரைகளில் உடைப்பு ஏற்பட்டு, விளைநிலங்களுக்கு உள்ளேயும் தண்ணீர் சென்றது.
எனவே, ராஜவாய்க்கால் பள்ளத்தை முழுமையாக துார்வாரி கழிவு நீர் கலப்பதை தவிர்த்தால், ராஜவாய்க்கால் பள்ளம், பல கிராமங்களின் முக்கிய நீராதாரமாக மாறி விடும்.
தடுப்பணைகள் கட்டினால், சுற்றுப்பகுதிகளில் நீர் மட்டமும் உயரும்; உப்பாறு ஓடைக்கும் நிரந்தர நீர்வரத்து கிடைக்கும்.
இது குறித்து திருப்பூர் மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும்.

