UPDATED : ஜூலை 25, 2026 11:42 PM
ADDED : ஜூலை 25, 2026 08:44 PM

பல்லடம்:பல்லடம்-மங்கலம் சாலையில், வேளாண் விற்பனைக் கூடம் எதிரே மழைநீர் வடிகால் நிரம்பி, கழிவுநீர் சாலையில் வழிந்தோடுவது தொடர்கதையாக உள்ளது. முன்னதாக இந்த கழிவுநீர் பி.ஏ.பி. வாய்க்காலில் கலக்கப்பட்டு வந்தது. இதுகுறித்து புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து, வாய்க்காலுக்கு செல்லும் பாதை அடைக்கப்பட்டதால், தற்போது கழிவுநீர் முழுவதும் சாலையிலேயே வழிந்தோடி வருகிறது.
மங்கலம் சாலையைச் சுற்றி வீடுகள், கடைகள் உள்ளன. இவற்றில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அனைத்தும் மழைநீர் வடிகால் வழியாக வந்தாலும், அதனை வெளியேற்ற 'டிஸ்போசல் பாயின்ட்' இல்லாததால், சாலையில் தேங்கி சுகாதாரப் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இப்பிரச்னைக்கு நகராட்சி இதுவரை நிரந்தர தீர்வு ஏற்படுத்தாத நிலையில், தனியார் ஒருவர் தற்காலிகமாக சிறிய கால்வாய் அமைத்துள்ளார். இருப்பினும், அதன் வழியாக வெளியேறும் கழிவுநீரும் மீண்டும் சாலையிலேயே வழிந்தோடுவதால் பிரச்னை நீடிக்கிறது.
தேங்கி நிற்கும் கழிவுநீரால் சாலை சேதமடைவதுடன், கொசுக்கள் பெருகும் சூழலும் உருவாகியுள்ளது. ஏற்கனவே டெங்கு பரவல் அதிகரித்து வரும் நிலையில், இந்த நிலை பொதுமக்களின் சுகாதாரத்துக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.
எனவே, கழிவுநீரை முறையாக வெளியேற்றும் நிரந்தர வடிகால் வசதியை ஏற்படுத்தி, சுகாதாரப் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
