தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/குப்பை பிரச்னைக்கு 'குட் பை' சொல்வது எப்போது? 

குப்பை பிரச்னைக்கு 'குட் பை' சொல்வது எப்போது? 

குப்பை பிரச்னைக்கு 'குட் பை' சொல்வது எப்போது? 


ADDED : செப் 06, 2025 07:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 06, 2025 07:17 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி சார்பில், பாறைக்குழிகளில் குப்பை கொட்டி நிரப்பும் செயல் தொடரும் நிலையில் அதற்கு மக்களின் எதிர்ப்பும் வலுத்து வருகிறது; இவ்விவகாரத்தில், 'கீறல் விழுந்த ரெக்கார்டு' போன்று ஒரே விஷயத்தை திரும்ப, திரும்ப பேசி வரும் அதிகாரிகள் தரப்பு, சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைப்பற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும், என்கின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

கோவையுடன் இணைந்திருந்த திருப்பூர், கடந்த, 2009ல் தனி மாவட்டமாக உருவாகி, 15 ஆண்டுகள் உருண்டோடி விட்டது. கடந்த, 2008ல், திருப்பூர் மாநகராட்சி உருவானது. வந்தாரை வாழ வைத்து கொண்டிருக்கும் திருப்பூரில், நகர மற்றும் ஊரகப்பகுதிகளில், ஆண்டுக்காண்டு மக்கள் தொகையும், குடியிருப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதற்கு காரணம், திருப்பூரில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள் தான்.

அக்கறை இல்லை!



ஆனால், திருப்பூர் மாநகராட்சி உட்பட ஊரகப்பகுதிகளில், குவியும் குப்பைகளை கொட்டுவதற்கும், அதை தரம்பிரித்து அகற்றுவதற்கும் இடமில்லை என்பது தான் வேதனை. தொழில் வளர்ச்சியில் உச்சம் தொட அக்கறை காண்பிக்கப்பட்ட அளவுக்கு சுத்தம், சுகாதாரத்தை உள்ளடக்கிய திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்துவதில் கோட்டை விட்டிருக்கிறது, திருப்பூர் மாவட்டம். திருப்பூர் மாநகராட்சியை பொறுத்தவைர, தினசரி சேகரமாகும், 700 டன் குப்பையை கொட்டுவதற்கு, காலவாதியான கைவிடப்பட்ட பாறைக்குழிகள் தான், கை கொடுத்து கொண்டிருக்கின்றன.

தொடரும் விவாதம்!



'பாறைக்குழிகளில் குப்பை கொட்டப்படுவதால், சுகாதாரக்கேடு ஏற்படுகிறது; நீர், நிலம், காற்று என அனைத்தும் மாசுபடுகிறது' என, கொதித்தெழுகின்றனர் பொதுமக்களும், தன்னார்வ அமைப்பினரும். 'அறிவியல் ரீதியாக சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் தான், பாறைக்குழிகளில் குப்பைக் கொட்டப்படுகிறது; அதனால், மாசு எதுவும் ஏற்படுவதில்லை. குப்பை கொட்ட இடமில்லாததால், வேறு வழியே இல்லை' என்கிறது மாநகராட்சி நிர்வாகம். இருதரப்பினருக்கும் இடையிலான இந்த விவாதம், 'கீறல் விழுந்த ரெக்கார்டு' போன்ற திரும்ப, திரும்ப ஒலித்துக் கொண்டு தான் இருக்கிறது. இது, எப்போது முற்றுப்பெறும் என்ற கேள்விக்கு தான், பதில் இல்லை.

தீர்வு தான் என்ன?



சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சிலர் கூறியதாவது:

'பாறைக்குழியில் குப்பை கொட்டுவதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது,' என்பது தான் சுற்றுச்சூழல் அமைப்பினர், பொதுமக்களின் ஒரே குற்றச்சாட்டு. இதனை தெளிவுப்படுத்தி, மக்களை சமாதானப்படுத்துவது கடினமான விஷயம் அல்ல. ஏற்கனவே, குப்பை கொட்டப்பட்ட பாறைக்குழிகள் உள்ள இடம், அதனை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளில் இருந்து, குடிநீர் வடிகால் வாரியத்தினர் சார்பில், மக்கள் பயன்படுத்தும் நிலத்தடி நீரை சேகரித்து ஆய்வுக்கு உட்படுத்தி, அதன் தன்மையை தெளிவுப்படுத்தலாம்.

அப்பகுதிகளில் உள்ள விவசாய நிலம் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில், மண் பரிசோதனை செய்து, மண் வளம் எந்த நிலையில் இருக்கிறது என்பதை தெளிவுப்படுத்தலாம். மாசு கட்டுப்பாடு வாரியத்தினர் உதவியுடன், குப்பைக் கொட்டப்பட்ட பாறைக்குழி உள்ள இடங்கள், சுற்றுப்புற பகுதிகளில் உள்ள காற்றின் மாசு அளவை கண்டறியலாம். அவ்வாறு, நீர், நிலம், காற்று மாசுப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டால், அதற்கான திட்டத்தை செயல்படுத்தலாம்.

மாறாக, மனித உயிர்களுக்கு எவ்வித பிரச்னையும் இல்லை என்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்டால், மக்களின் குழப்பம் தீரும். ஒரு வேளை, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுவது உறுதி செய்யப்பட்டால், மாநகராட்சி நிர்வாகம் மாற்று சிந்தனைக்குள் நுழைவதும் எளிதாகும். ஆனால், இதுபோன்ற எந்ததவிமான அறிவியல் ரீதியான ஆய்வையும் மேற்கொள்ளாமல், ஒரே விஷயத்தை திரும்ப, திரும்ப பேசிக் கொண்டிருப்பதால் எந்த பலனும் ஏற்பட போவதில்லை. மாறாக, தினம், தினம் புதிது புதிதாக பிரச்னைகள் உருவாகிக் கொண்டு தான் இருக்கும்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.

முளைக்கும் புதிய சங்கங்கள்

குப்பை பிரச்னையை, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சட்டப்பிரிவினர் தான், நீதிமன்றம் வரை கொண்டு சென்றனர். அதன்பின், ஆங்காங்கே மக்கள் விழிப்புணர்வு பெற துவங்கினர். முதலிபாளையம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழு, திருப்பூர் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்குழு, முதலிபாளையம் - நல்லுார் பொதுமக்கள் கூட்டியக்கம் என்பது போன்ற பல்வேறு பெயர்களில் சங்கங்கள் உருவாகி கொண்டே வருகின்றன. எனவே, குப்பை பிரச்னைக்கு 'குட் பை' சொல்லாதவரை, எதிர்ப்பலைகளை மாநகராட்சி நிர்வாகம் எதிர்கொள்ள வேண்டிய சூழலை இது ஏற்படுத்தி இருக்கிறது.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us