ADDED : பிப் 03, 2026 06:36 AM
உடுமலை: உடுமலை அருகே தேவனுார்புதுாரில், பஸ் ஸ்டாண்ட் அமைக்க, ஊராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடுமலை, பொள்ளாச்சி தாலுகா எல்லையில் தேவனுார்புதுார் ஊராட்சி உள்ளது. இந்த இரண்டு தாலுகாவிலிருந்தும், ஆனைமலை - பழநி வழித்தடத்திலும், வால்பாறை செல்லும் பஸ்கள் அதிகளவில் இயக்கப்படுகின்றன.
அதே போல், உடுமலை, பொள்ளாச்சி பகுதியிலிருந்தும் சுற்றுப்புற கிராமங்களுக்கு ஏராளமான டவுன்பஸ்கள் இயக்கப்படுகின்றன.
மூன்று ரோடு சந்திப்பு பகுதியில், தேவனுார்புதுாரில் பஸ் ஸ்டாப் அமைந்துள்ளதால், இருபுறமும் பஸ்கள் நிறுத்தப்படுகின்றன. இந்த ரோட்டில், வாகன போக்குவரத்தும் அதிகமுள்ளது.
அதே போல், இந்த ரோடுகளில் ஆக்கிரமிப்புகளும் அதிகரித்துள்ளதால், கடும் பாதிப்பு ஏற்படுகிறது. பஸ் ஸ்டாப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் நிரந்தரமாகியுள்ளது.
அடிக்கடி விபத்துகளும் நடந்து வருகின்றன. சுற்றுப்புற கிராமங்களிலிருந்து, பஸ்சுக்காக காத்திருக்கும் மாணவ, மாணவியர், பொதுமக்கள் கால்கடுக்க நிற்பதோடு, வெயில், மழையிலும் பாதித்து வருகின்றனர்.
எனவே, தேவனுார்புதுார் பகுதியில், நிரந்தரமாக பஸ் ஸ்டாண்ட் அமைக்க வேண்டும் என, பல ஆண்டுகளாக பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
எனவே, அங்கு உடனடியாக பஸ் ஸ்டாண்ட் அமைக்க ஊராட்சி நிர்வாகமும், உடுமலை ஒன்றிய நிர்வாகத்தினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

