நிர்வாக செலவினங்கள் குறையுமா? வேளாண் பட்ஜெட் குறித்து விவசாயிகள் எதிர்பார்ப்பு
நிர்வாக செலவினங்கள் குறையுமா? வேளாண் பட்ஜெட் குறித்து விவசாயிகள் எதிர்பார்ப்பு
ADDED : ஆக 01, 2026 05:50 AM
திருப்பூர்: தமிழக சட்டசபையில் வரும் 5ம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
அரசின் வீண் செலவு களைக் குறைத்து, அத்தொகையை நேரடியாகத் தங்களுக்குச் சென்றடையச் செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.
வேளாண் துறைக்கு ஆண்டுதோறும் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டாலும், தங்களின் அடிப்படைப் பிரச்னைகள் குறைந்தபாடில்லை என ஆதங்கப்படும் விவசாயிகள் முன்வைக்கும் முக்கியக் கோரிக்கைகள்:
வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் வணிகம் ஆகிய 4 துறைகளையும் ஒருங்கிணைக்கும் 'உழவர் தொடர்பு அலுவலர் திட்டம் 2.0' முழுவீச்சில் செயல்படுத்தப்பட வேண்டும். இதன் மூலம் விவசாயிகள் ஒவ்வொரு அலுவலகமாக அலைய வேண்டிய நிலை மாறும்.
களத்தில் நேரில் சென்று பணியாற்றும் அலுவலர்களை விட, அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. தேவைக்கு அதிகமாக உள்ள பணியாளர்களை பிற துறைகளுக்கு மறுபகிர்வு செய்வதன் மூலம் நிர்வாகச் செலவைக் குறைக்கலாம்.
மத்திய அரசின் 'பி.எம். கிசான்' தொகையோடு சேர்த்து, மாநில அரசும் தன் பங்குக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.
மானியத்தில் வழங்கப்படும் தெளிப்பான் போன்ற கருவிகளை குறிப்பிட்ட நிறுவனங்களிடம் மட்டுமே வாங்க வேண்டும் என வற்புறுத்தக் கூடாது. ஜி.எஸ்.டி. பில்லுடன் உள்ளூர் கடைகளில் வாங்கினாலும் மானியம் கிடைக்க வழி செய்ய வேண்டும்.
விவசாயிகளுக்குப் பயன்படாத தேவையற்ற திட்டங்களை நீக்கி, அத்தொகையை வேறு பயனுள்ள திட்டங்கள் மூலம் நேரடியாக விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.
டிராக்டர் வாடகை உயர்ந்துவிட்டதால் கோடை உழவுக்கான மானியத்தை மீண்டும் வழங்க வேண்டும். மேலும், வேளாண் அலுவலர்கள் குறிப்பிட்ட நேரத்தில் பணியாற்றுவதை உறுதி செய்ய 'பயோமெட்ரிக்' வருகைப் பதிவை கட்டாயமாக்க வேண்டும்.
