அண்ணா மறுமலர்ச்சி திட்ட நுாலகங்கள்... பயன்பாட்டுக்கு வருமா?:பாழாகும் கட்டடங்களால் மக்கள் கவலை
அண்ணா மறுமலர்ச்சி திட்ட நுாலகங்கள்... பயன்பாட்டுக்கு வருமா?:பாழாகும் கட்டடங்களால் மக்கள் கவலை
UPDATED : ஆக 17, 2026 05:37 AM
ADDED : ஆக 16, 2026 04:51 PM

உடுமலை: கிராமங்களில் பராமரிப்பு இல்லாமல், பாழடைந்து வரும், அண்ணா மறுமலர்ச்சி திட்ட நுாலக கட்டடங்களை சீரமைத்து, பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால், வாசிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுவதுடன் போட்டித்தேர்வுக்கு தயாராகும் கிராமப்புற மாணவ, மாணவியரும் பயன்பெறுவார்கள். உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் ஒன்றிய ஊராட்சிகளில், கடந்த, 2006-07ம் ஆண்டில், அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட்டது. திட்டத்தின் கீழ், ஊராட்சி வாரியாக நுாலகங்கள் திறக்கப்பட்டன.
நுாலக கட்டடத்திற்கு 4 லட்சம் ரூபாய் வரை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஆயிரம் புத்தகங்கள், அலமாரி வழங்கப்பட்டது.
நுாலகர்களாக சம்பந்தப்பட்ட கிராமங்களில், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், மாதத்திற்கு, 750 ரூபாய் ஊக்கத்தொகை அடிப்படையில், நியமிக்கப்பட்டனர்.
உடுமலை ஒன்றியத்திலுள்ள 38; குடிமங்கலம் ஒன்றியத்திலுள்ள 23 ஊராட்சிகளிலும், அண்ணா மறுமலர்ச்சி திட்ட நுாலகங்கள் துவங்கப்பட்டது. நுாலக வசதியில்லாத கிராம மக்களும், இந்நுாலக வசதியை பயன்படுத்தி வந்தனர்.
நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் நுாலகத்துக்கு தருவிக்கப்பட்டதால், இவ்வகை நுாலகத்தை நாள்தோறும் நுாற்றுக்கணக்கான கிராம மக்கள் பயன்படுத்தி வந்தனர். போட்டித்தேர்வுக்கு தயாராகும் கிராமப்புற மாணவர்களுக்கு, குறிப்புதவி நுால்களும் பயன்பட்டு வந்தன.
அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில், நிதி ஒதுக்கீடு இல்லாதது உட்பட காரணங்களால், படிப்படியாக நுாலகங்கள் மூடப்பட்டன. செயல்பாட்டில் இருந்த நுாலகங்களுக்கும், புதிதாக புத்தகங்கள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
இதனால், அனைத்து நுாலகங்களும் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டன. கடந்த 2006-7 தி.மு.க., ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட இத்திட்டத்தை மீண்டும் மேம்படுத்த, கடந்த தி.மு.க., ஆட்சிக்காலத்திலும் பல முறை அரசுக்கு கோரிக்கை விடப்பட்டது. ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தீர்வு என்ன? பல ஆண்டுகளாக பயன்பாடு இல்லாமல், பூட்டப்பட்ட நுாலக கட்டடங்கள், திறந்த வெளி 'பாராக' பயன்பட்டு வருகின்றன. சில கட்டடங்களை ஊராட்சி நிர்வாகங்கள் சிமெண்ட் குடோனாகவும், பிற தேவைகளுக்கும் பயன்படுத்துகின்றனர்.
சில கிராமங்களில், கட்டடம் யாரும் பயன்படுத்த முடியாத அளவிற்கு, சேதமடைந்துள்ளது. இவ்வாறு, இத்திட்டத்திற்கு செலவிடப்பட்ட பல கோடி ரூபாய் நிதி வீணாகியுள்ளது.
இப்பிரச்னைக்கு தீர்வாக, அண்ணா மறுமலர்ச்சி திட்ட நுாலகங்களை, பொது நுாலகத்துறையுடன் இணைக்க வேண்டும். அல்லது உடனடியாக, நுாலக கட்டடங்களை புதுப்பித்து, நாளிதழ் மற்றும் புதிய புத்தகங்கள் வாங்க நிதி ஒதுக்க வேண்டும்.
இதனால், கிராமங்களில், வாசிப்பு திறன் மேம்படுவதுடன், போட்டித்தேர்வுக்கு தயாராகும், கிராமப்புற மாணவ, மாணவியரம் பயன்பெறுவார்கள். இது குறித்து அரசுக்கு கல்வி ஆர்வலர்கள் தரப்பில் மீண்டும் கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.
இதே போல், திருப்பூர் மாவட்ட நுாலக ஆணைக்குழுவின் கீழ் செயல்படும் கிளை நுாலகங்களிலும், கூடுதல் கட்டடம், கழிப்பிட வசதி உள்ளிட்ட கோரிக்கைகள் கண்டுகொள்ளப்படாமல் உள்ளது.
இத்தகைய கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டிலும், அரசு கவனம் செலுத்தி நிதி ஒதுக்கீடு செய்ய எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
