/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பின்னலாடை நகரம் வெற்றிநடை போடுமா?
/
பின்னலாடை நகரம் வெற்றிநடை போடுமா?
ADDED : அக் 06, 2024 03:28 AM

ஹங்கேரியில், செஸ் ஒலிம்பியாட் தொடரின், 45வது சீசன் நடந்தது. 197 நாடுகளில் இருந்து அணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற இப்போட்டியில், இந்தியா சார்பில் குகேஷ், அர்ஜூன் எரிகைசி, பிரக்ஞானந்தா, விதித் சந்தோஷ், குஜ்ராத்தி, ஹரிகிருஷ்ணா பங்கேற்றனர். மொத்தம், 11 சுற்றில், பத்து வெற்றிகளை குவித்து, ஒரு டிரா பெற்றதன் மூலம், 21 புள்ளிகளை பெற்று, இந்திய அணி முதலிடத்தை கைப்பற்றி தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தது.
திருப்பூரில் சதுரங்க வீரர்களிடம் ஆர்வம் எப்படி இருக்கிறது?
திருப்பூர் மாவட்ட சதுரங்க சங்கச் செயலாளர் சிவன் கூறியதாவது:
மாவட்ட அளவில் நடத்தப்படும் போட்டிகளில், திருப்பூரைச் சேர்ந்தவர்கள் ஆர்வமுடன் பங்கேற்கின்றனர். வெற்றி பெறுவோர் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க தேவையான வழிகாட்டுதல்களை தொடர்ந்து வழங்கி வருகிறோம். தரவரிசை பட்டியலில், 2,000மாவது இடத்தில் இருப்பவர்கள் திருப்பூரில் உள்ளனர். திருப்பூரைச் சேர்ந்த கோகுலகிருஷ்ணன் மாநில போட்டியில் இரண்டாமிடம் பெற்று, தேசிய போட்டிக்கு தேர்வாகியுள்ளார். ஏழு வயது பிரிவு தேசிய போட்டியில் திருப்பூர் வீரர் பங்கேற்றுள்ளார்.
சிறுவர், சிறுமியராக இருக்கும் போதே, சிறந்த வீரர், வீராங்கனைகளை உருவாக்க ஒவ்வொரு வாரமும் ஒரு அகாடமி மூலம் தொடர்ந்து மாவட்ட சதுரங்கப் போட்டிகளை நடத்திக்கொண்டே இருக்கிறோம். ஒவ்வொரு போட்டியிலும், 400 முதல், 600 பேர் பங்கேற்கின்றனர். குறைந்தபட்சம் ஏழு வயது உள்ளவர்கள் பங்கேற்கின்றனர். சதுரங்க போட்டியில் பங்கேற்பது முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்துள்ளது. பொதுப்பிரிவில் 40 வயதினருடன், பத்து வயது சிறுமி மோதும் அளவுக்கு ஆர்வம் பெருகி வருகிறது.
ஒரு நாளைக்கு பத்து மணி நேரம் வரை சதுரங்கத்தை விளையாடி தீவிர பயிற்சியை தொடர்ந்ததால், விடாமுயற்சியால், 13 வயதில் பிரக்ஞானந்தா, குகேஷ் கிராண்ட் மாஸ்டராக உயர்ந்துள்ளனர். ஆர்வம், திறமை இருந்தால், பயிற்சியும் வழங்குகிறோம். போட்டிகளுக்கும் அழைத்து செல்கிறோம்.