ADDED : மே 08, 2026 04:52 AM
அவிநாசி: சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், அவிநாசி தொகுதியில் த.வெ.க. சார்பில் போட்டியிட்ட கமலி வெற்றி பெற்றுள்ளார்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த இவர், தற்போது அவிநாசி தொகுதியின் புதிய எம்.எல்.ஏ.வாக பொறுப்பேற்க உள்ளார்.கடந்த, 10 ஆண்டுகளாக அவிநாசி தொகுதியின் எம்.எல்.ஏ.-வாக இருந்தவர் அ.தி.மு.க.-வைச் சேர்ந்த முன்னாள் சபாநாயகர் தனபால். கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் அவர் தொகுதிப் பக்கமே வரவில்லை என்றும், மக்களின் குறைகளைக் கேட்கத் தவறிவிட்டார் என்றும் தொகுதி மக்கள் மத்தியில் ஆதங்கம் நிலவியது.தனது உடல்நலக்குறைவு காரணமாகவே களப்பணியில் தொய்வு ஏற்பட்டதாக, தனபால் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதன் விளைவாக, அவிநாசி சேவூர் சாலையில் உள்ள எம்.எல்.ஏ. அலுவலகம் பெரும்பாலான நாட்களில் பூட்டியே கிடந்ததாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.வெளியூர் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்தால் அவர்களை எளிதில் சந்திக்க முடியாது; மக்களின் பிரச்னைகளை உடனுக்குடன் கவனத்திற்குக் கொண்டு செல்ல முடியாது என்ற ஒரு கருத்தும் மக்களிடையே நிலவியது. இதனால் 'உள்ளூர் வேட்பாளருக்கே முன்னுரிமை' என்ற முழக்கம் அவிநாசியில் வலுவாக இருந்தது.இத்தகைய சூழலில், ராசிபுரத்தைச் சேர்ந்த கமலி தற்போது வெற்றி பெற்றுள்ளார். 'வெளியூர்க்காரர்' என்ற பிம்பத்தைத் தாண்டி, அவர் தனது கடமைகளைச் சரியாகச் செய்ய வேண்டும். எம்.எல்.ஏ. அலுவலகம் எப்போதும் திறந்திருக்க வேண்டும். மக்களின் குறைகளைத் தீர்க்க எம்.எல்.ஏ. நேரடியாகத் தொகுதிப் பணிகளில் ஈடுபட வேண்டும்.
