கனவு இல்ல திட்ட பயனாளிகளுக்கு மானியம் வருமா?:கடனையும் கட்ட முடியாமல் தவிப்பு
கனவு இல்ல திட்ட பயனாளிகளுக்கு மானியம் வருமா?:கடனையும் கட்ட முடியாமல் தவிப்பு
UPDATED : ஆக 28, 2026 07:28 PM
ADDED : ஆக 28, 2026 05:02 PM

உடுமலை: 'கனவு இல்லம்' திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான மானிய நிதியை, தமிழக அரசு ஒதுக்கீடு செய்யாததால், கட்டுமான பணிகளுக்கு வாங்கிய கடனைக்கூட கட்ட முடியாமல் பயனாளிகள் தவித்து வருகின்றனர். ஊரக வளர்ச்சித்துறையினர் எவ்வித பதிலும் வழங்காததால், அவர்கள் விரக்தியில் உள்ளனர். தமிழகம் முழுவதும், 'கனவு இல்லம்' திட்டத்தின் கீழ், 1 லட்சம் வீடுகள் கட்ட கடந்த தி.மு.க., ஆட்சிக்காலத்தில், இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றிய ஊராட்சிகளிலும், நுாற்றுக்கணக்கான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு பணியாணை கடந்த மார்ச் மாதத்தில் வழங்கப்பட்டு, வீடு கட்டும் பணிகளை பயனாளிகள் துவக்கினர்.
இத்திட்டத்தில், வீடு கட்டுமான பணிகளின் அடிப்படையில், நான்கு கட்டமாக மானிய நிதி அரசால் வழங்கப்படும்.
வீட்டின் அடித்தளம் பணிகள் நிறைவு பெற்றதும், ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளை பயனாளிகள் தொடர்பு கொண்ட போது, நிதி ஒதுக்கீடு வரவில்லை என தெரிவித்துள்ளனர். மானியம் கிடைக்கும் என்ற நம்பிக்கையிலலும், அரசு வழங்கிய பணியாணை இருந்ததால் பயனாளிகள் தயக்கமின்றி பணிகளை துவக்கினர்.
சட்டசபை தேர்தல் அறிவிப்பு வெளியானதும், நிதி ஒதுக்கீடு நிறுத்தப்பட்டது. தேர்தலுக்கு பிறகு, பல மாதங்களாக வீடு கட்டுமான பணிகளை நிறுத்தாமல், கடன் பெற்று பணிகளை பயனாளிகள் மேற்கொண்டனர்.
பெரும்பாலான பயனாளிகள், அடித்தளம், ஜன்னல் மட்டம், 'லிண்டல்' கான்கிரீட், மேல் தள கான்கிரீட் என பல லட்சம் ரூபாயை செலவிட்டுள்ளனர்.
மானியத்தொகை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பணிகளை மேற்கொண்ட பிறகு, புதிய அரசு அமைந்த பிறகும், மானிய தொகைக்கான எவ்வித அறிவிப்பும் வரவில்லை.
ரூ.40 ஆயிரம் மதிப்பிலான சிமென்ட் மற்றும் இரும்புக்கம்பியையும், சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தினர் வழங்கவில்லை. பல மாதங்களாக பணிகளை நிறுத்த வழியில்லாததால், கடன் வாங்கி கட்டுமான பணிகளை மேற்கொண்டனர்.
பணிகள் நிறைவு பெற்ற பிறகும், மானியம் வழங்குவது குறித்து ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் எவ்வித பதிலும் அளிக்காதது, பயனாளிகளை விரக்தியடைய செய்துள்ளது.
அதிகாரிகள் அலட்சியம் பயனாளிகள் கூறியதாவது: தமிழக அரசின், கனவு இல்ல திட்டத்தில் மானியம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கட்டுமான பணிகளை மேற்கொண்டோம். பணிகளை நிறுத்தினால் மீண்டும் கட்டுமான தொழிலாளர்கள் கிடைக்க மாட்டார்கள்.
கட்டுமான பொருட்களின் விலையும் அதிகரித்து விட்டது. எனவே, கடன் வாங்கி பணி செய்தோம். முதற்கட்ட மானியத்தொகை கூட கிடைக்கவில்லை.
பணிகளை நிறைவு செய்தவர்களும், மானியம் வரும் முன், வீடுகளில் குடியேறாத நிலையில் உள்ளனர். ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளும் அலட்சியமாக பதில் அளிக்கின்றனர். அரசு உடனடியாக மானியத்தொகை வழங்காவிட்டால், நிரந்தர கடனாளியாகி விடுவோம்.
இவ்வாறு, தெரிவித்தனர்.
