ADDED : ஏப் 03, 2026 10:40 PM
திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில், 1,112 அமைவிடங்களில் மொத்தம் 2,822 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஓட்டுச்சாவடிக்கும் ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர், ஓட்டுப்பதிவு அலுவலர் நிலை - 1, நிலை - 2, நிலை - 3 என நான்கு பேர் வீதம், 20 சதவீதம் கூடுதலாக, 3,390 ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர்கள்; ஓட்டுப்பதிவு அலுவலர்கள் 10,170 பேர் என, மொத்தம் 13 ஆயிரத்து 560 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். எட்டு தொகுதிகளில், மொத்தம் 129 பதற்றமான ஓட்டுச்சாவடிகள் உள்ளன. இந்த ஓட்டுச்சாவடிகளை கண்காணிப்பதற்காக, நுண் பார்வையாளர்கள் 179 பேர் நியமிக்கப்படுகின்றனர்.
கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, நுண்பார்வையாளர்களுக்கு தேர்தல் பணி ஒதுக்கீடு செய்வது தொடர்பான கூட்டம் நடந்தது. மாவட்ட தேர்தல் அலுவலர் மனிஷ் நாரணவரே தலைமை வகித்தார். தேர்தல் பார்வையாளர்கள் தினேஷ் ஸ்ரீ வத்சவா, சுதா வர்மா, சரிகா மோகன், தர்மேந்திர சிங் முன்னிலை வகித்தனர். முதல்கட்டமாக, 114 நுண் பார்வையாளர்களுக்கு, பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தேர்தல் நுண்பார்வையாளர்கள், வீடு தேடிச்சென்று தபால் ஓட்டுப்பதிவு செய்யும் குழுவில் இடம்பெறுவர் மற்றும் தேர்தல் நாளன்று பதற்றமான ஓட்டு சாவடிகளில் பணிபுரிவர்.
